தமிழக கடலோரப் பகுதிகளிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட ரூ.1.20 கோடி மதிப்பிலான 4.23 லட்சம் மாத்திரைகளை, இலங்கை நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
தமிழக கடலோரப் பகுதிகளிலிருந்து இலங்கைக்கு தங்கம், போதைப் பொருட்கள், பீடி இலைகள், கடல் அட்டை உள்ளிட்டவற்றை கடத்தும் சம்பவங்கள் வழக்கமான ஒரு நிகழ்வாக உள்ளது..
இந்நிலையில், இலங்கையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் மருந்துப் பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதையடுத்து, தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படும் பொருட்களின் பட்டியலில் மருந்து, மாத்திரைகளும் இடம்பெற்றுள்ளன.

கடந்த சனிக்கிழமை மாலை தமிழகத்திலிருந்து இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், கல்பிட்டி கடற்கரை பகுதியில் இலங்கை கடற்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அப்பகுதியில் நின்றிருந்த ஒரு ஆம்னி வேனில், தமிழகத்திலிருந்து படகு மூலம் கடத்திச் செல்லப்பட்டு பதுக்கிய 4.23 லட்சம் `பிரிகாபாலின்’ என்ற பெயருடைய, மனப்பதற்றத்தை தணிக்கக்கூடிய மருந்து மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக கொழும்பு மாவட்டம் ராஜகிரிய பகுதியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்தனர். மேலும், கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து இலங்கை கடற்படையினர் விசாரித்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகளின் இந்திய சந்தையின் மதிப்பு ரூ.1.20 கோடி எனறு சொல்லப்படுகிறது.







