சென்னை :
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வரும் 26ஆம் தேதி டெல்லியில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் பல்வேறு கட்ட தீர்ப்புகள் வெளியான நிலையில், சமீபத்தில் பொதுக்குழு தீர்மானம் செல்லும் என்றும், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து அதிமுக பொதுக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என ஈபிஎஸ் தரப்பில் கோரப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்துள்ளது தேர்தல் ஆணையம். அதிமுக பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையமே ஈபிஎஸ்ஸை அங்கீகரித்துள்ளதால் அவரது தரப்பினர் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் தான் டெல்லிக்கு வரும் 26ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி செல்ல உள்ளார். டெல்லி பயணத்தின்போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சந்திப்பின்போது அதிமுக – பாஜக கூட்டணி விவகாரம் மட்டுமல்லாமல் வேறு சில விஷயங்களும் பேசப்பட உள்ளதாக தெரிகிறது. அண்ணாமலை அண்மையில் திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்ட நிலையில், திமுகவினர் மீதான புகார்களில் நடவடிக்கை எடுக்கக் கோரியும், தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்தும் அமித் ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைப்பார் என்றும் அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.







