பாஜகவை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற இந்தியா கூட்டணியின் குறிக்கோளை நிறைவேற்றும் வகையில் இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் அமையும் என நம்புகிறேன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர் தமிழ்நாடு முதல்வர் இன்று பண்டிதர் அயோத்திதாசர் நினைவாக மணிமண்டபம் திறந்து வைத்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் முன்வைத்த நீண்ட கால கோரிக்கை நிறைவேறி இருப்பது எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விசிக சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். டிசம்பர் 23 திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெல்லும் ஜனநாயகம் மாநாடு நடைபெறும்.
இதில் இந்தியா கூட்டணி தலைவர்களான தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக கூட்டணி தலைவர்கள், இந்தியா கூட்டணி தேசிய தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுவார்கள். இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கான அடிதளமாக இந்த மாநாடு அமையும் என நம்புகிறேன். நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் வாக்குப்பதிவுக்கு பின்னர் நடந்துள்ள கருத்து கணிப்பு முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக முடிவு வெளிவந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். கர்நாடக தேர்தலில் மக்கள் பாஜகவிற்கு தக்க பாடம் புகட்டியது போல ஐந்து மாநிலங்களிலும் பாரதிய ஜனதாவுக்கு நிச்சயம் தோல்வியை தருவார்கள் என்று நாடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. பாரத் ஜூடே யாத்ராவை நடத்திய ராகுல் காந்தி மீது இந்திய அளவில் இளம் தலைமுறையினர் பெரிய நம்பிக்கையில் உள்ளனர்.
காங்கிரஸ் கட்சிக்கான செல்வாக்கு இதன் மூலம் கூடியிருப்பதாக கருதுகிறேன். இந்தியா கூட்டணி, ஆட்சியில் உள்ள பாஜகவை அப்புறப்படுத்துவதற்காக ஒற்றை குறிக்கோளோடு ஒருங்கிணைந்து இருக்கிறது. அந்த குறிக்கோள் நிறைவேறும் என்பதை உணர்த்தக்கூடிய தேர்தல் முடிவுகளாக இந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் அமையும் என்று நான் கருதுகிறேன். தமிழக ஆளுநர் திமுக அரசுக்கு நெருக்கடி தரும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். சட்டமன்றத்தில் பல்கலைகழகம் தொடர்பாக 10 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு அனுப்பிய நிலையில் ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியது, அவரது அரசியல் அமைப்பு சட்ட விரோத போக்கை உணர்த்துகிறது.
வேந்தர் பதவியை முதல்வர் தான் ஏற்று நடத்த வேண்டும் என்று மசோத கூறுவதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தனியார் பல்கலைகழகங்களுக்கு உரிமையாளர் வேந்தராக இருப்பார். அதனை ஏற்றுக்கொள்ள பக்குவம் அவருக்கு உள்ளது. ஆனால் மாநில அரசு, அரசை வழிநடத்தும் முதல்வர் வேந்தராக இருக்க வேண்டும் என்பதை அவரால் ஏன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உச்சநீதிமன்றம் உடனடியாக முதல்வரை அழைத்து பேசி இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கி சுமூகமான தீர்வை காண வேண்டும் என்று அறிவுரை கூறியிருக்கிறார். நான் ஏற்கனவே சொன்னேன் விசிக சார்பில் அறிக்கை வெளியிட்டோம். இனிமேலாவது அவர் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்பார் என்று நான் நம்புகிறேன். உடனடியாக ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். கோபிசெட்டிபாளையம் இந்திரா நகரில் சாதிவெரியர்களால் சிறுவர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். காவல் துறையினரின் கைது நடவடிக்கையை வரவேற்கிறோம் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.







