செய்திகளை வெளியிட வேண்டும்: பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தலைமை இயக்குநர் வி பழனிச்சாமி வலியுறுத்தல்


சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் ஊடகம் மற்றும் தொடர்பியல் துறையில் ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கு இன்று (09 ஜூன் 2026) நடைபெற்றது. பயிலரங்கில் தலைமையுரை ஆற்றிய தென் மண்டல தலைமை இயக்குனர் திரு வி பழனிச்சாமி அவர்கள், ஊடகவியலாளர்கள் காலத்திற்கேற்ப தொழில்நுட்பத் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், செய்திகளை வெளியிடும்போது அவற்றின் உண்மைத்தன்மையை அறிந்து வெளியிட வேண்டும் என்றும் தெரிவித்தார். ஏஐ தொழில்நுட்பங்கள் நிறைந்துள்ள இக்காலத்தில் அவற்றை திறம்பட ஊடகவியலாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளையும் அவற்றுக்கு தீர்வுகாணும் வகையிலும் செய்திகளை வெளியிட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.


நிகழ்ச்சியில் தலைமையுரை ஆற்றிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம் கிருஷ்ணன், இப்பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை குறிப்பாக கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கை 300லிருந்து தற்போது கிட்டத்தட்ட 1300 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார். நுழைவுத்தேர்வை தமிழிலும் அறிமுகப்படுத்தியதும், பல்கலைக்கழகத்தின் சமுதாயக் கல்லூரியின் மூலம் பயிற்றுவிக்கப்படும் திறன் வளர்ச்சி சார்ந்த பாடப்பிரிவுகள் மாணவர்களின் உயர்கல்விக்கு பெரிதும் பங்காற்றியுள்ளன என்று கூறினார். பட்டம் பெறுவது மட்டுமே கல்வியின் நோக்கம் அல்ல என்றும், சமூக மாற்றம் மற்றும் வளர்ச்சிக்காகக் கல்வியைப் பயன்படுத்துவதே உண்மையான கல்வியின் வெளிப்பாடு என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் சார்பில், கடந்த 12 ஆண்டுகளின் சாதனைகள் மற்றும் பருவநிலை மாற்றம் டெல்டா மாவட்டங்களில் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து மூத்த விஞ்ஞானி திரு அசோக் ராஜா விளக்கினார். இந்தாண்டு எல் நினோ காரணமாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும், மழையும் குறுகிய நாட்களில் அதிக மழைப்பொழிவும் இருக்கும் என்றும் தெரிவித்தார். அதற்கேற்ப்ப விவசாயிகள் பயிர் செய்ய வேண்டும் என தெரிவித்தார். மேலும், தற்போதுள்ள தொழில்நுட்பத்தின் மூலம் ஒவ்வொரு கிராமத்திற்கும் வானிலை முன்னறிவிப்பு தகவல்களை பெற முடியும் என்றும் கூறினர். இதற்கான முன்னெடுப்புகள் மற்றும் ‘மௌசம் கிராம்’ செயலி மூலம் கிராம பஞ்சாயத்து அளவில் வானிலை தகவல்களைப் பெறுவது குறித்தும் எடுத்துரைத்தார்.

மத்திய திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் பேசிய திரு சம்சுதீன், கடந்த 12 ஆண்டுகளில் திறன் வளர்ச்சிக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் பிஎம் சேது உள்ளிட்ட நலத் திட்டங்கள் குறித்து விளக்கினார். அதனைத் தொடர்ந்து, நீலப் பொருளாதாரம், பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட மீன்வளத் திட்டங்கள் மற்றும் அத்துறையில் தற்போது நடைபெற்று வரும் மாற்றங்கள் குறித்து, மண்டபம் மத்திய கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தின் முதுநிலை விஞ்ஞானி திரு விகாஸ் எடுத்துரைத்தார்.பயிலரங்கின் நிறைவாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஊடகவியலாளர்களுக்கு எவ்வாறு உதவும் என்பது குறித்தும், செய்திகளை அணுகும் முறை, பொதுச் செய்திகளைக் கையாளும் போது இருக்க வேண்டிய கவனம் குறித்தும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் ஊடகம் மற்றும் தொடர்பியல் துறையின் பேராசிரியர் திரு பாலசுப்ரமணிய ராஜா விளக்கினார்.நிகழ்ச்சியில், சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் இயக்குனர் திரு அருண்குமார், பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுலோச்சனா சேகர், மக்கள் தொடர்பு அலுவலர் திரு பிரபஞ், பல பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டனர்.







