ஒடிசா ரயில் விபத்து போன்ற போன்ற சம்பவங்கள் ஏன் நடக்கின்றன. இதற்கு யார் காரணம் என்பதற்கு பிரதமர் மோடியும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும் பதிலளிக்க வேண்டும் என்று மல்லிகார்ஜூன் கார்கே வலியுறுத்தினார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒடிசா மாநிலம் பாஹநகர் பஜார் நிலையம் அருகே பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டுள்ளது. விபத்துக்குள்ளான இந்த ரயிலின் பெட்டிகள் அருகே இருந்த தண்டவாளத்தில் கவிழ்ந்தன. அருகில் இருந்த தண்டவாளத்தில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா ரயிலின் பெட்டிகள் மீது மோதியது. அத்துடன் அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில், ஏற்கெனவே விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் மீது பயங்கரமாக மோதி, அதன் பெட்டிகளும் தடம் புரண்டன. இதில் சுமார் 280ற்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், 900க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தாதகவும் கூறப்படுகிறது.
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசியல் கட்சிகள் வேறுபாடின்றி, தாங்கள் முன் வந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நமது சிறந்த பிரதமர் மற்றும் ரயில்வே அமைச்சரிடம் நான் பல கேள்விகளை கேட்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் ஏன் நடக்கின்றன. இதற்கு யார் காரணம் என்பதற்கு அவர்கள் பதிலளிக்க வேண்டும்,ஆனால் இன்று நாம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று மல்லிகார்ஜூன் கார்கே ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக டிவிட்டரில், ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானதில் ஆழ்ந்த வருத்தம். நமது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்டவர்களுடன் உள்ளன. மீட்பு பணிகளை விரைவுப்படுத்தவும், காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் அதிகாரிகளை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்ய காங்கிரஸ் தொண்டர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவு செய்து இருந்தார்.






