சென்னை:
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய், சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாகத் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து இந்த வழாவில் பேசிய அவர், 4 முக்கியப் புதிய சமூக நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் படைவீரர் மகள்களின் திருமண நிதியுதவி
முன்னாள் படைவீரர்களின் குடும்பப் பொருளாதார சுமையைக் குறைக்கும் நோக்கில் மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை முதலமைச்சர் வெளியிட்டார். அதன்படி, முன்னாள் படைவீரர்களின் 2 மகள்களுக்கான திருமண நிதியுதவித் தொகை இதுவரை ரூ.25,000 ஆக இருந்ததை, இனி ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் – முன்னாள் படைவீரர்கள்
மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி முன்னாள் படைவீரர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மாதாந்திர உதவித்தொகையை அரசு உயர்த்தியுள்ளது. இதுவரை மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த ரூ.5,000 உதவித்தொகை, இனி ரூ.7,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
விடுதலைப் போராட்ட வீரர்கள்
நாட்டின் விடுதலைக்காகத் தங்களின் வாழ்வை அர்ப்பணித்த தியாகிகளுக்குச் செய்யும் நன்றிக்கடனாக ஓய்வூதியத் தொகையைத் தவெக அரசு மாற்றியமைத்துள்ளது:
தியாகிகளுக்கான விடுதலைப் போராட்ட வீரர் ஓய்வூதியம் ரூ.23,000 ஆக உயர்வு செய்யப்பட்டுள்ளது. தியாகிகளின் மறைவுக்குப் பின் அவர்களின் வாரிசுகள் பெறும் குடும்ப ஓய்வூதியம் ரூ.12,500 ஆக உயர்வு செய்யப்பட்டுள்ளது.
மாவீரர்களின் வழித்தோன்றல்களுக்குச் சிறப்பு ஓய்வூதியம்
தமிழக மண்ணில் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராக வீரப்போர் புரிந்த வரலாற்று நாயகர்களின் வாரிசுகளைக் கௌரவிக்கத் தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி:
வீரபாண்டிய கட்டபொம்மன்
முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி
மருது சகோதரர்கள்
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி
ஆகியோரின் நேரடி வாரிசுகள் மற்றும் வழித்தோன்றல்களுக்கான சிறப்பு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.11,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.







