சேலம்,
கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பும் தருவாயில் இருந்த நிலையில கடந்த 1-ந் தேதியில் இருந்து கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்பட்டு வருகிறது.
அதிகபட்சமாக கபினி அணையில் இருந்து வினாடிக்கு 27 ஆயிரம் கனஅடி வரை திறக்கப்பட்டது. அதே நேரம் கிருஷ்ண ராஜ சாகர் அணையில் இருந்தும் வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வீதம் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சற்று மழை குறைந்தது. இதனால் அங்குள்ள அணைகளுக்கும் நீர்வரத்து குறைந்தது. இதனால் தமிழகத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டது.
கபினி அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 84 அடியாகும். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 82.71 அடியாக உள்ளது, அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரத்து 820 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 9 ஆயிரத்து 583 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதே போல் கிருஷ்ண ராஜ சாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124.80 அடியாகும். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 106.37 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 8064 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
அணையில் இருந்து குடிநீருக்காக கால்வாய் மற்றும் காவிரி ஆற்றில் வினாடிக்கு 2049 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.கபினி, கிருஷ்ண ராஜ சாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் தமிழகத்துக்கு தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது.
கர்நாடகாவில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதனால் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்க மற்றும் பரிசல் இயக்க விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்பட்டது..மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 78.034 அடியாக உயர்ந்து காணப்பட்டது.
அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரத்து 808 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தொடர்ந்து வினாடிக்கு 1500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 40.02 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 4-ந் தேதி முதல் மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியது. அப்போது அணையின் நீர்மட்டம் 73.02 அடியாக இருந்த நிலையில் கடந்த 5 நாட்களில் அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொகுதி மறுவரையறை தொடர்பாக மக்களவை எம்.பி.க்களுடன் தமிழக முதல்வர் விஜய் ஆலோசனை
சென்னை,மத்திய பா.ஜனதா அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி






