சென்னையில் இரவு நேரத்தில் வெளுத்து வாங்கிய மழையால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பெரம்பூர் மற்றும் பழவந்தாங்கலில் உள்ள சுரங்கப் பாதைகளில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து தடைபட்டது. இதேபோல, சென்னையையொட்டிய மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. இந்நிலையில், சென்னையில் நேற்று மாலை முதலே பரவலாக மழை பெய்தது. இரவிலும் மழை கொட்டித் தீர்த்தது. இதன்படி, சென்ட்ரல், நுங்கம்பாக்கம், சூளைமேடு, கோடம்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இரவு ஒன்பது மணிக்கு தொடங்கிய மழை இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. இதனால், வடபழனியில் இருந்து கோயம்பேடு செல்லும் பிரதான சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தண்ணீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினர்.
பூந்தமல்லி சாலையில் போரூர் முதல் ராமாபுரம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு மழையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.







