சென்னை:
குழந்தைகளை இந்த உலகத்திற்கு கொண்டுவருபவர் தாய். அவரை நம் நாடு தெய்வமாகவே கொண்டாடுகிறது. கடந்த காலங்களில் சரியான மருத்துவமனை இல்லாததாலும், தனியார் மருத்துவமனைகளில் செலவு செய்ய கட்டணம் இல்லாத காரணத்தாலும் மகப்பேறு காலத்தில் ஏழை தாயோ, சேயோ இறக்கும் அவலநிலை நீடித்து வந்தது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு இலவச மகப்பேறு மருத்துவமனைகளை ஆங்காங்கே அமைத்து உயிரிழப்புகளை தடுக்கும் உயரிய சேவையை செய்து வருகிறது. ஆனால் சில இடங்களில் முறையான பராமரிப்பு இல்லாததாலும், அதிகாரிகளின் அலட்சியப் போக்காலும் மருத்துவமனைகளில் முறையான சிகிச்சை அளிக்கப்படாத அவலநிலை நீடித்து வருகிறது.
இதேபோல் உயரிய நோக்கத்தோடு கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதுதான் சென்னை மாநகராட்சி 10வது மண்டலம் 142வது வார்டுக்கு உட்பட்ட சென்னை சைதாப்பேட்டை ஜீனஸ் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனை. இந்த மருத்துவமனையின் அவல நிலையத்தான் நாம் இப்போது காணப்போகிறோம்.
இந்த மருத்துவமனை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொந்த தொகுதிக்கு உட்பட்டது. இங்கு சைதாப்பேட்டையை சுற்றியுள்ள பெண்கள் குழந்தை பேறுக்காக அனுமதிக்கப்பட்டு குழந்தை பெற்று வருகின்றனர். மகப்பேறு மட்டும் இன்றி பிறந்த குழந்தைகள் முதல் 11 வயது சிறுவர்கள் வரை புற நோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஒரே ஒரு டாக்டர் மட்டுமே இங்கு பணியாற்றினார். அவரும் ஓய்வு பெற்றதால் கடந்த 7 மாதங்களாக புற நோயாளிகள் பிரிவில் எந்த டாக்டரையும் இதுவரை நியமனம் செய்யப்படவில்லை. நர்சு மட்டுமே அந்த பணியில் உள்ளார். குழந்தைகளை டாக்டர் இல்லாமல் நர்சால் எப்படி கவனிக்க முடியும் என்பதுதான் இங்கு கேள்விக்குறியாக உள்ளது.
இதுபோன்ற காரணங்களால் நோய்வாய்ப்படும் குழந்தைகளை ஏழை தாய்மார்கள் வெகு தொலையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் அவலநிலை ஏற்படுகிறது. அவ்வாறு செல்லும்போது குழந்தைகளுக்கு வலிப்பு உள்ளிட்ட தீவிர நோயால் அவதிப்படும் வாய்ப்பு உள்ளதாக புற நோயாளிகள் பிரிவுக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பி அவசியுற்றவர்கள் புலம்புகின்றனர். சில தினங்களுக்கு முன்பு ஒருவர் இந்த மருத்துவமனை முன்பு நின்று குழந்தைக்கு சிகிச்சை அளிக்கமாட்டீர்களா என்று கத்திவிட்டும் சென்றார்.
இதுபற்றி சைதாப்பேட்டை மகப்பேறு மருத்துவமனைக்கு சென்று விசாரிக்கையில், சரியான அளவில் பணியாளர்கள் அங்கு நியமிக்கப்படவில்லை என்றும், இதனால் பணிச்சுமை அதிகமாக உள்ளதாகவும், புறநோயாளிகள் பிரிவில் 7 மாதங்களாக மருத்துவரை நியமிக்காததால் அவதிக்குளாவதாகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இதை உறுதிப்படுத்தும் வகையில் மருத்துவமனையில் பராமரிப்பு பணியும் சரியாக இல்லை. நுழைவு வாயிலில் எந்த மாடியில் எந்த சிகிச்சை பிரிவு உள்ளது என்பதை தெரிவிக்கும் போர்டும் கிழிந்து தொங்குகிறது. இதையும் சீரமைக்கவில்லை. இதனால் நோயாளிகள் குழப்பமடையும் நிலை ஏற்படுகிறது. மருத்துவமனையில் உள்ள ஜெனரேட்டரை இயக்க ஒரு பணியாளர் கிடையாது. சாலையோரம் கடை வைத்துள்ளவர்தான் ஜெனரேட்டரை இயக்கும் அவலம் உள்ளது.
குழந்தை பிறப்பு பிரிவில் ஒரே ஒரு சிஆர்ஐ டாக்டரும் மூன்று நர்சுகளும், குறைந்த அளவிலான ஆயாக்களும் மட்டும் உள்ளதாகவும் கூடுதலாக டாக்டர், நர்சுகள், ஆயாக்களை நியமிக்க வேண்டும் என்பதும் அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்த ஆதங்கம் இங்கு எடுபடுமா? கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு குழந்தைகள் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசு மருத்துவமனை என்றால் சாதாரணமாக நினைத்துவிட்டீர்களா? எளிய மக்களுக்கு அனைத்து சேவைகளையும் வழங்கும் இடம் என்று கூறியிருக்கிறார்.
அடிக்கல்லோடு முடிந்ததா?
2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் தேதி சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.10 கோடி மதிப்பிலானபுதிய பேறுகால, பச்சிளங் குழந்தைசிகிச்சை பிரிவு கட்டிடத்துக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார். இங்கு ரூ.42 கோடியில் பன்னோக்கு சிறப்பு மருத்துவக் கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். ஆனால் அடிக்கல் நாட்டியது நாட்டியபடியாகவே உள்ளது. அடுத்தக்கட்ட பணிகள் எதுவும் இதுவரை நடைபெறவில்லை.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





