திருப்பத்தூர் மாவட்டத்தில் தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த மரம் ஏறும் கூலித் தொழிலாளி மூளைச்சாவடைந்தார். இந்நிலையில், அவரது உடல் உறுப்புகளை உறவினர்கள் தானமாக வழங்க முடிவுசெய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த முத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவருக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் முருகானந்தன் (வயது 38). இவர் மரம் ஏறும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி (26) என்ற மனைவியும், புவியரசு (3) மற்றும் கோபிநாத் என்ற கைக்குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை பள்ளத்தூர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரின் தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக வேலைக்கு சென்றுள்ளார். மரத்தின் மீது ஏறி தேங்காய் பறித்துக்கொண்டிருந்த போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 70 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.
இந்த விபத்தில் தலையில் பலத்த அடிப்பட்டதால் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் முருகானந்தனுக்கு மூளைச் சாவு ஏற்பட்டு கோமா நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தனர். இவரை காப்பாற்றுவது மிகவும் கடினம் என மருத்துவர்கள் அவரது உறவினர்களிடம் கூறினர்.
அதை தொடர்ந்து தொழிலாளியின் உறவினர்கள் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வந்துள்ளனர். பின்னர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தலைமையில் உடல் உறுப்பு தானம் செய்ய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பிறகு முருகானந்தனின் உறவினர்களிடம் உடலை ஒப்படைக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளனர். கை குழந்தையுடன் வறுமை நிலையில் தவித்து கொண்டு நிற்கும் கூலி தொழிலாளியின் குடும்பத்திற்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலகளும் பொதுமக்களும் கோரிக்கை வைத்தனர்.






