சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து நோயாளிகள் வருகின்றனர். இதில் உள்நோயாளிகள் அதிகம். மக்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு மருத்துவமனை வளாகத்தில் தனியார் மூலம் உணவகம் நடத்தி வருகிறது.
இந்நிலையில் 3 நாட்களுக்கு முன் ஒருவர் பஜ்ஜி வடை போண்டா வாங்கினார். அப்போது அந்த பஜ்ஜி போண்டா வைத்திருந்த கண்ணாடி பெட்டியில் எலிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் உணவக உரிமையாளரிடம் கேட்டனர். அதற்கு அவர் அலட்சியமாக பதில் கூறினார். பிறகு எலிகளை விரட்டினார்.
இதுகுறித்து ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதன்பின் ஸ்டான்லி மருத்துவ கல்லுாரி முதல்வர் அந்த உணவகத்தை ஆய்வு செய்தார். உடனடியாக அந்த உணவகத்தை தற்காலிகமாக மூட உத்தரவிட்டார்.






