திருச்சி:
திருச்சி கிராப்பட்டியில் கல்லூரி மாணவர்களுக்கான பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அரசு விடுதி உள்ளது. இதில் பல்வேறு கல்லூரி மாணவர்கள் 120 பேர் தங்கி உள்ளனர்.
இந்த விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக மாணவர்கள் புகார் கூறி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை வழங்கிய உணவும் தர மற்று இருப்பதாக குற்றம்சாட்டி, அந்த உணவை பெரிய பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, திருச்சி – மதுரை சாலையில் கிராப்பட்டி மேம் பாலத்தில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து எடமலைப்பட்டி புதூர் காவல் ஆய்வாளர் விஜய பாஸ்கர் மற்றும் போலீஸார் சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், மாணவர்கள் மறியலை கைவிட மறுத்து விட்டனர். இதையடுத்து, போலீஸார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள், திடீரென உணவுடன் ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டு செல்ல முயன்றனர்.
போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தடுத்து நிறுத்தி, இந்தப் பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணப்படும் என உறுதியளித்ததின் காரணமாக மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு திரும்பி சென்றனர்.