சென்னை:
உலக மனித உரிமைகள் நாள் இன்று அதனை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்தனர்.
உலக மனித உரிமைகள் நாளை முன்னிட்டு அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நாளில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான நமது பொறுப்பை உணர்ந்து, அனைத்து மக்களின் உரிமைகளையும் மதிப்போம் என உறுதியேற்போம். மனித உரிமைகளை மதிப்பதே நல்ல சமூகத்தின் அச்சாரமாகும். ஆனால் நமக்கோ மனித உரிமை என்பது ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற நமது தேசிய நெறியின் கொள்கையாகும். மனித உரிமைகளுக்கான நமது அர்ப்பணிப்பை நாம் உறுதி செய்து, அனைவரையும் உள்ளடக்கிய, அமைதியான உலகத்தை உருவாக்குவோம்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில்:-
மனிதனை மனிதனாக மதித்திட வேண்டும் எனும் மனிதநேய உணர்வை வளர்த்திடும் நோக்கில் ஆண்டுதோறும் டிசம்பர் 10-ம் நாள்,உலக நாடுகளால், “உலக மனிதஉரிமை நாள்” என்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு உலக மனித உரிமைகள் பிரகடனத்தின் 75-வது ஆண்டு ஆகும்.
அவ்வகையில் ‘அனைவருக்கும் சுதந்திரம், சமத்துவம் மற்றும்நீதி’ என்பதை இந்த ஆண்டுக்கான மனித உரிமைகள் நாள் கருப்பொருளாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. 1948-ம் ஆண்டு டிச.10-ம் நாள் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை ஏற்று வெளியிட்டது. அப்பிரகடனத்தை ஏற்றுக்கொள்வதில் முக்கியப் பங்காற்றிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதைத்தொடர்ந்து இந்தியாவில் மனித உரிமைகள் பாதுகாப்புச்சட்டம் 28.9.1993 அன்று நிறைவேற்றப்பட்டது.
அந்த சட்டப்படி, இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தமிழகத்தில் தான் திமுக அரசு, மனிதஉரிமை மீறல் நிகழ்வுகள் எங்கும் நிகழக்கூடாது எனும் நோக்கில் 17.4.1997 அன்று ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவர் தலைமையில், “தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம்” எனும் புதிய அமைப்பை ஏற்படுத்தியது. இந்த ஆணையம் தொடங்கப்பட்டது முதல் செப். 2023 வரை இந்த ஆணையத்துக்கு வரப்பெற்ற 2 லட்சத்து 60 ஆயிரத்து 55 முறையீடுகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, 2 லட்சத்து 17 ஆயிரத்து 918 முறையீடுகள் மீது தீர்வு கண்டு, ஆணை பிறப்பித்து நலிந்தவர்களின் நலன் காக்கும் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது.
எந்த இடத்தில், எவர், எதனால் பாதிக்கப்படுகிறார்களோ, அந்த இடத்துக்கு, உடனே விரைந்து சென்று அவருக்கு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து அவரை விடுவித்துக் காப்பாற்றும் இதயம் கொண்டது இந்த திமுக அரசு. மாமல்லபுரம் அருகில் பூஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஒரு நரிக்குறவர் சமுதாயப் பெண்ணும், அவரது குழந்தையும் அப்பகுதியில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் பங்குகொள்ளச் சென்றபோது, சிலர் அவர்களைத் தடுத்துத் திருப்பி அனுப்பிய செய்திகேட்டு, அறநிலையத் துறை அமைச்சர் மூலம் அவர்களை விருந்தில் பங்குபெறச் செய்ததுடன். பூஞ்சேரியில் உள்ள அந்தப் பெண்ணின் இல்லம் சென்று, அவருக்கு ஆறுதல் கூறியது இந்த திமுக அரசு. அத்துடன், அப்பகுதி வாழ் நரிக்குறவர் மற்றும் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த 282 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் உட்பட பல நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர்களைப் பெருமைப்படுத்தியதும் இந்த அரசு.
அதேபோல, மகளிருக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணச்சலுகை வழங்கியதுடன் 2023 செப்.15-ல் அண்ணா பிறந்தநாளில் மாதம் தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைத் தொடங்கிவைத்து, இது உதவித் தொகையல்ல, உரிமைத்தொகை என்று கூறி மகளிர் சமுதாய உரிமையைப் போற்றிய ஒரு அரசாகத் திகழ்கிறது.
இந்த உணர்வோடு, மனித உரிமை மீறல் நிகழ்வுகள் எங்கும் நடைபெறாமல் முற்றிலும் தடுப்போம். அதற்கு ஒவ்வொரு நிமிடமும் விழிப்புடன் நாம் செயல்பட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.






