சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3வது நாள் கூட்டம் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
இந்நிலையில், கோடநாடு விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக எம்.எல்.ஏ.வுமான வைத்தியலிங்கம் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். இந்த சம்பவம் நடைபெற்று இரண்டரை ஆண்டுகளாகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் வைத்தியலிங்கம் வலியுறுத்தினார்.
அதற்கு சட்டப்பேரவையில் பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; கோடநாடு விவகாரத்தில் குற்றம் இழைத்தவர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர். கோடநாடு வழக்கு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் சிபிசிஐடி விசாரிக்க தொடங்கியுள்ளது. சிறப்பு புலனாய்வு பிரிவு மூலம் கோடநாடு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. கோடநாடு வழக்கில் விசாரணை முன்னேற்றம் குறித்த அறிக்கை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். கோடநாடு வழக்கில் யார் தவறு செய்திருக்கிறார்கள் என்பது விரைவில் வெளிவரும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் முதலமைச்சர் உறுதியளித்தார்.






