சென்னை:
மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து அவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க கோரி தமிழக சட்டசபையில் இருந்து பா.ஜ.க. எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை வழக்கம்போல் கூடி நடைபெற்று வந்தது. அப்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமித்ஷா குறித்து தவறாக பேசியதாகவும், அவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கையை முன் வைத்து பா.ஜ.க. எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
வெளியே வந்த பா.ஜ.க. எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அவையில் நேற்று முன்தினம் அதிமுக உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி ஐ.பி.எல். டிக்கெட் குறித்து கேட்டகேள்விக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பதிலில் அமித்ஷாவின் மகன் உங்கள் நண்பர்தானே. நீங்கள் தான் பெற்று தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனை அவைக்குறிப்பில் இருந்து நீங்க வேண்டும். உதயநிதி பேசும்போது மாண்புமிகு என்று குறிப்பிடாமல் வெறும் அமித்ஷா என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் முதல்வர் இதுபற்றி கூறும்போது திரு என்று குறிப்பிட்டதாக கூறுகிறார். உதயநிதி கூறியதை அவைக்குறிப்பில் இருந்துநீக்க கோரி தான் வெளிநடப்பு செய்தோம் என்றார்.
வானதி சீனிவாசன் எம்எல்ஏ பேசும்போது, கோவை மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வருகின்றனர். 15 முதல் 20 நாட்களுக்கு ஒருமுறை தான் தண்ணீர் வருகறிது. இந்த பிரச்சனை குறித்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.







