சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநில மாநாடு இன்று காலை 9.30 மணி் முதல் மாலை 5.30 மணி வரை சென்னையில் நடைபெறுகிறது.
இம்மாநாட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரலாற்றுச் சிறப்புமிக்க, மிகச் சிறப்பான வாழ்த்துரை ஒளிபரப்பப்படுகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி. ஆர்.இரவீந்திரநாத் விடுத்துள்ள ஊடக்கங்களுக்கான செய்தி.
பிற்போக்குச் சக்திகளிடமிருந்து “நவீன அறிவியல் மருத்துவம் ” என்ற மனிதகுலத்தின் ” அறிவியல் மணி மகுடத்தை”காத்திட வேண்டும்.
மிக்ஸோபதி (Mixopathy),ஒருங்கிணைந்த மருத்துவம்
(Integrated medicine), காமன் ஃபவுண்டேஷன் கோர்ஸ் ( Common Foundation Course ),ஜோதிட மருத்துவம் (Astrological Medicine) ஆன்மீக மருத்துவம்( Spiritual Medicine),
பாரம்பரிய மருத்துவம் ( Traditional Medicine), வேதகால மருத்துவம் ( Vedic Medicine), என்ற பெயரில் , நவீன அறிவியல் மருத்துவத்தை நீர்த்துப் போகச் செய்வதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.
மருத்துவத்தில் போலி அறிவியலை, மூடநம்பிக்கைகளை, அறிவியலுக்கு எதிரான கருத்துக்களை திணிப்பதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.
நெக்ஸ்ட் (NExT) தேர்வு
மருத்துவ, பல் மருத்துவ மாணவர்களுக்கு, இளம் மருத்துவர்களுக்கு பெரும் சுமையாக இருக்கும்.மாநில அரசின் உரிமையை பறிக்கும்.எனவே “நெக்ஸ்ட் ” தேர்வு திணிப்பை நிரந்தரமாக ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.
“நீட் ” தேர்விலிருந்து தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இளநிலை மருத்துவம் ,முதுநிலை மருத்துவம், மற்றும் உயர் சிறப்பு மருத்துவ இடங்களுக்கு நிரந்தர விலக்கு வழங்கிட வேண்டும்.
MBBS மருத்துவ இடங்களை குறைப்பதையும், புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படுவதை தடுப்பதையும், ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.
மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கும்; ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கையை ஒன்றிய அரசே நடத்திட முயல்வதை கைவிட வேண்டும்.
எம்.பி.பி.எஸ் மாணவர் ஒவ்வொருவரும்,முதலாம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து படிப்புக் காலம் முடியும் வரை சில குடும்பங்களை தத்தெடுக்க வேண்டும், என்ற ” குடும்ப தத்தெடுப்பு திட்டம் (Family Adoption Programme) மாணாக்கர்களுக்கு பயனற்றது. பாதுகாப்பற்றது.மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் பல்வேறு புதிய பிரச்சினைகளை உருவாக்கும்.எனவே இத்திட்டத்தை கைவிட வேண்டும்.
முதுநிலை மருத்துவ மாணவர்களுக்
கான “மாவட்ட மருத்துவமனை கட்டாயப் பணி ( District Residential Programme) இளம் மருத்துவர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் திட்டமாகும்.இது, உழைப்புச் சுரண்டல் உட்பட பல்வேறு வகையான சுரண்டல்களுக்கும் வழிவகுக்கும். பாதுகாப்பற்ற, பயனற்ற இத்திட்டத்தை முழுமையாக ஒன்றிய அரசு ரத்து செய்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின்,தமிழ்நாடு மாநில 4 ஆவது மாநாடு மற்றும் 20 ஆம் ஆண்டு விழா, இன்று காலை 9.30 மணிக்கு சென்னையில், “கலைவாணர் அரங்கில்” நடைபெற உள்ளது.
சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் த.அறம் இந் நிகழ்வுகளுக்கு தலைமை தாங்குகிறார். மாநில துணைத்தலைவர் என். வெங்கடேஷ் வரவேற்புரையாற்றுகிறார் .
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா மாநாட்டை துவக்கி வைக்கிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அளிக்கும் ,பதிவு செய்யப்பட்ட வீடியோ வாழ்த்துரை ஒளிபரப்படுகிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் .திருமாவளவன் எம்.பி, திருப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஏஐடியுசி யின் அகில இந்திய துணை தலைவர் கே. சுப்பராயன் எம்.பி, அணுப்போர் தடுப்பிற்கான சர்வதேச மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர்.அருண்மித்ரா, சமாதானம் மற்றும் முன்னேற்றத்திற்கான இந்திய டாக்டர்கள் சங்கத்தின் அகில இந்தியச் செயலாளர் டாக்டர் ஏ.ஆர். சாந்தி ,கேரள மாநிலச் செயலாளர் டாக்டர் ஷஜித் , ஜனநாயக அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் பி.பாலகிருஷ்ணன் , எஸ்.டி.பி.ஜி.ஏ தலைவர் பி.சாமிநாதன், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.அகிலன், அரசு அனைத்து டாக்டர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் சி.சுந்தரேசன், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் சட்டப் போராட்டக் குழுத் தலைவர் டாக்டர் எஸ். பெருமாள் பிள்ளை , தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் எம்.அஜய்முகர்ஜி, தமிழ்நாடு உறைவிட மருத்துவர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் எம்.கீர்த்திவர்மன் , ஐடிபிடி மாணவர் பிரிவின் அகில இந்திய அமைப்பாளர் டாக்டர் வி. ஸ்ரீ நாத், தமிழ்நாடு பல்மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ். ஐஸ்வர்ய லெட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கடந்து வந்த பாதைகளும், எதிர்கால கடமைகளும் பற்றி , சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத் உரையாற்றுகிறார்.
இம்மாநாட்டில் , தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் கே.ரஜனி, சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் டாக்டர் கே.பாலகுமாரி,கேரளத்தைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் டி.ரோசினரா, திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்த டாக்டர் v.சௌந்திரராஜன் ஆகியோரின் மருத்துவ சேவையை பாராட்டி சிறந்த மருத்துவர் விருது வழங்கப்படுகிறது. மருத்துவர்கள் எம்.காமராஜ்,ஜி.கமலேஷ்,எஸ்.பிரசாந்த் உள்ளிட்ட 16 இளம் மருத்துவர்களுக்கு சிறந்த இளம் மருத்துவர்களுக்கான விருது வழங்கப்படுகிறது.
பிற்பகல் நிகழ்வில், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் மாநாட்டு சிறப்பு மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார். முதல் பிரதியை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டுரை,கவிதை மற்றும் குறும்படப் போட்டிகளில் வெற்றி பெற்ற மருத்துவ மாணாக்கர்களுக்கும், பல் மருத்துவ மாணாக்கர்களுக்கும், மருத்துவர்களுக்கும் ,பல் மருத்துவர்களுக்கும் பரிசளித்து,பாராட்டி, மாநாட்டு நிறைவுப் பேருரையாற்றுகிறார். தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஐ.பொற்கொடி ,கே .மதுமிதா ஆகியோர் நன்றி நவில்கின்றனர். இம்மாநாட்டில் 1500 க்கும் மேற்பட்ட மருத்துவ மாணாக்கர்களும், மருத்துவர்களும், இதர மருத்துவத்துறையினரும் பங்கேற்கின்றனர்.






