தமிழகத்தில் புதிதாக 15 சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகள் மற்றும் 10 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் தொடங்குவதற்குத் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் தடையில்லா சான்று வழங்கியுள்ளார் என்ற செய்தியைக் குறிப்பிட்டு, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச். ராஜா தமிழக அரசுக்குச் சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். புதிதாகத் தொடங்கப்படும் சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் அனைத்துமே தனியார் பள்ளிகள் தான் என்பது நிதர்சனம் என்று கூறியுள்ள அவர், தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் தமிழக அரசு, அதைவிட இரண்டு மடங்கு கூடுதலாக அரசுப் பள்ளிகளின் வளர்ச்சி மீது அக்கறை செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
போதிய மாணவர்கள் இல்லாத காரணத்தால் கடந்த ஆண்டு இழுத்து மூடப்பட்ட 208 அரசுப் பள்ளிகளை மீண்டும் திறக்கவும், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை மிகக் குறைவாக இருக்கும் 1,000-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளுக்கு உயிரூட்டவும் முதலமைச்சரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள பள்ளிகளில் உடனே ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும், தனியார் பள்ளிகளுக்கு நிகராகக் கணினி ஆய்வகம், வேதியியல் ஆய்வகம், நூலகம் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உருவாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு நிகரான வசதிகளையும், கற்பித்தல் முறைகளையும் மேம்படுத்த வழிவகை செய்யும் மத்திய அரசின் ‘பிஎம் ஸ்ரீ’ (PM SHRI) திட்டத்தில் தமிழகம் இணைய வேண்டும் எனத் தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு ஹெச். ராஜா அறிவுறுத்தியுள்ளார்.







