செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், புதுப்பட்டினம், காந்தி நகர், பாவாணர் தெருவில் அமைந்துள்ளது பாவலரேறு தமிழ்வழி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி. முத்து அய்யா, இராசேந்திரன் அய்யா, அரணமுறுவல் அய்யா , செங்கதிர் அய்யா உள்ளிட்ட தமிழறிஞர்களால் 16.06.2000 அன்று இப்பள்ளி தொடங்கப்பட்டது.
தமிழ்வழியில் கல்வி கற்றால் மட்டுமே தமிழையும், தமிழினத்தை காக்க முடியும் என்ற உயர்ந்த நோக்கோடு கடந்த 23 ஆண்டுகளாக தமிழ்வழிக் கல்வியை வழங்கி வருகிறது இப்பள்ளி. தனித்தமிழுக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர் , “தமிழ்த்தேசியத்தின் தந்தை “ என்று போற்றப்படுபவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார். அவரது பெயர்கொண்டே இப்பள்ளி இயங்குகிறது. அரசு அனுமதி பெற்று இயங்கி வரும் இப்பள்ளியில் மாநிலப் பாடத்திட்டத்தில் தான் கல்வி கற்பிக்கப்படுகிறது.
மாணவர்கள் அனைவரும் தனித்தமிழிலேயே (பிறமொழிக் கலப்பின்றி) உரையாடுகிறார்கள். தமிழ்ப்பண்பாட்டை அடியொற்றியே இப்பள்ளி செயல்பட்டு வருகிறது. தற்போது துளிர் (எல்.கே.ஜி.) தளிர் (யு.கே.ஜி.) மற்றும் 1 முதல் 5 வகுப்பு வரை உள்ள மாணவர்களைக் கொண்டு இப்பள்ளி இயங்குகிறது. இப்பள்ளியில் 5 ஆசிரியர்கள், 54 மாணவர்கள் உள்ளனர். இப்பள்ளியை தமிழ்வழிக் கல்விக்களம் அறக்கட்டளை நடத்தி வருகிறது.
மாணவர்களிடம் எவ்வித கட்டணமும் வாங்காமல் கட்டணம் இல்லாக் கல்வியை வழங்கிறது. மேலும் விலையில்லா சீருடை, விலையில்லா புத்தகம், விலையில்லா குறிப்பேடுகளையும் வழங்கி வருகிறது. தமிழ் ஆர்வலர்கள் கொடுக்கும் நன்கொடையைக் கொண்டே இப்பள்ளி இயங்கி வருகிறது. விடுமுறை நாட்களில் திருக்குறள் வகுப்பு, தமிழ்ப்பயிற்சி வகுப்பு உள்ளிட்ட வகுப்புகளை கட்டணம் வாங்காமல் நடத்தி வருகிறது. 365 நாட்களும் தமிழுக்காகவும் தமிழ்வளர்ச்சிக்காகவும் இயங்கி வரும் இப்பள்ளியை காக்க வேண்டியது தமிழ் உணர்வாளர்களின் தலையாயக் கடமையாகும்.
குறிப்பு: தமிழகம் முழுவதும் இந்த தமிழ்வழிப்பள்ளி நூற்றுக்கும் மேல் இருந்தது. ஆங்கில மோகம் காரணமாக தற்போது 25க்கும் கீழ் குறைந்துவிட்டது.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





