வள்ளுவர் கோட்டம்: தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு கிராமிய கலைஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு- தமிழக நாட்டுப்புற இசை கலை மன்றம் சார்பில் தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்தல் மற்றும் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்றது.
தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நல சங்கத்தின் மாநில தலைவர் கலை நன்மணி காணை என்.சத்தியராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நலிவுற்ற நிலையில் வாழுகின்ற ஆயிரம் கலைஞர்களுக்கு மாதாந்திர நிதி உதவியும், ஆயிரம் நாட்டுப்புற கலைஞர்களுக்கு ஆடை அணிகலன்கள் மற்றும் இசைக்கருவிகள் வாங்கிட ரூபாய் 10,000 நிதி உதவியும் வழங்கிட ஆணை பிறப்பித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளப்பட்டது.
மேலும் நலிவுற்ற நிலையில் வாழும் 500 கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3000 மாதாந்திர நிதி உதவி தொகையினை ஆண்டுதோறும் ஆயிரம் கலைஞர்களுக்கு வழங்கிட வேண்டும்.
நாட்டுப்புற கலைஞர்களுக்கு ஆடை அணிகலன்கள், இசைக்கருவிகள் வாங்கிட 500 கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிதி உதவியை ஆயிரம் கலைஞர்களுக்கு வழங்கிட வேண்டும்,
கலைஞர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மாவட்ட கலை விருதுகள் மற்றும் உதவி சலுகைகளை உரிய நேரத்தில் வழங்காமல் காலம் தாமதம் செய்து வரும் கலை பண்பாட்டுத்துறை உரிய நேரத்தில் நலத்திட்டங்களை வழங்கிட வேண்டும்.
கலைப் பண்பாட்டுத்துறை பஜனை பாட்டு பேஸ்டிரம், சைடுடிரம், கோலாட்டம், பாரம்பரிய கும்மியாட்டம், சிலம்பாட்டம் ஆகிய கலைப் பிரிவுகளை சார்ந்த அனைத்து கலைஞர்களுக்கும் நிதி உதவி வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளனர் இது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது, கலை பண்பாட்டுத்துறை துணை இயக்குனர் ஹேமநாதன் மீது பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வரும் கலை பண்பாட்டுத் துறை இயக்குனர் காந்தி அவர்களின் செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.
வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களுக்கு தனக்கு கமிஷன் தரும் கலைஞர்களுக்கு மட்டுமே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிகழ்ச்சிகள் நடத்திட வாய்ப்பு வழங்கி வரும் ஹேமநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,
கலைப் பண்பாட்டு துறை மண்டல உதவி இயக்குனர்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு மாவட்ட கலை விருதுகள் மற்றும் சலுகைகளை தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே வழங்கி வரும் ஹேமநாதனின் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.
மாவட்ட கலை விருதுகள் வழங்கிட மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த தகுதியான கலைஞர்கள் அடங்கிய தேர்வு குழுவை அமைத்து மாவட்ட கலை விருதுகள் வழங்க வேண்டும்,
கலை பண்பாட்டு துறையின் திட்டங்களை அனைத்து கலைஞர்களுக்கும் கிடைக்க விடாமல் ஒரு சங்கத்தின் தலைவர் போல் தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே வழங்கி வரும் ஹேமநாதனை உடனடியாக துறை மாற்றம் செய்ய வேண்டும்०,
நாட்டுப்புற கலைஞர்களுக்கு விரோதமாக செயல்படும் இந்த அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யவில்லை என்றால் கலை பண்பாட்டு துறை வழங்கிய கலைஞர்களுக்கான அடையாள அட்டைகளையும் நல வாரிய உறுப்பினர் அட்டைகளையும் கலை பண்பாட்டு துறையில் திரும்ப ஒப்படைக்கும் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று வலியுறுத்தி கூறினார் .






