சென்னை:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு நோய்த்தொற்று அதிகரித்து கொண்டிருக்கிறது. தற்போது தினசரி பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டி வேகமாக அதிகரித்து செல்வதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதில் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. இரண்டு நாட்களுக்கு அவசரகால ஒத்திகை நடத்த முடிவு செய்தனர். அதன்படி, இன்றும் (10ம் தேதி) நாளையும் (11ம் தேதி) ஆகிய தேதிகள் தேர்வு செய்யப்பட்டன. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா அவசரகால ஒத்திகை இன்று தொடங்குகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் சுகாதாரத்துறை எந்த அளவிற்கு விழிப்புடன் இருக்கிறது என்பதை உறுதி செய்யும் நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.
அமைச்சர் மா.சு. ஆய்வு
இந்தநிலையில் தமிழகத்தின் மருத்துவமனைகளின் தயார் நிலை குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
கொரோ£ன முன்னெச்சரிக்கை தொடர்பாக இன்றும், நாளையும் அவசரகால ஒத்திகை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார அரசு மருத்துவமனைகள், வட்டம் சாரா அரசு மருத்துவமனைகள், மாவட்ட அரசு ம ருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் என அனைத்து மருத்துவ கட்டமைப்புகளிலும் மாதிரி பயிற்சி இன்று தொடங்குகிறது.
என்னென்ன வசதிகள் உள்ளன?
சென்னையில் இன்று காலை நானும், மருத்துவ துறையின் செயலாளரும் மற்றும் துறையை சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்றுள்ளனர். இதேபோல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இந்த மாதிரி பயிற்சியில் ஈடுபடுகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 369 ஆக உள்ளது. நாட்டில் தற்போது கொரோனா பாதித்தவர்களுக்கு பெருமளவில் மருத்துவமனை தேவைப்படுவதில்லை. வீடுகளிலேயே சிகிச்சை பெறுகின்றனர். முன்பு ஆக்சிஜன் பொறுத்தி சிகிச்சை அளிக்க வேண்டியது இருந்தது. ஆனால் தற்போது இது தேவைப்படவில்லை.
இந்த மாதிரி பயிற்சியில் மருத்துவமனையில் இருக்க கூடிய படுக்கை வசதிகள், வென்டிலேட்டர் வசதிகள், பயிற்சி பெற்ற மருத்துவர்கள் எண்ணிக்கை, மருத்துவ பணியாளர்கள் எண்ணிக்கை, கொரோனா பரிசோதனை வசதிகள், மாத்திரை மருந்துகள் கையிருப்பு எவ்வளவு உள்ளது, முகக்கவசங்கள் எண்ணிக்கை, தனிநபர் பாதுகாப்பு கவச உடை எண்ணிக்கை போன்றவை இதில் ஆய்வு செய்யப்படுகிறது. அனைத்து வகை ஆக்சிஜன் கைகையிருப்பும், அவசர ஊர்திகள் எண்ணிக்கையும் இதில் ஆய்வு செய்யப்படுகிறது.
64281 படுக்கைகள் தயார்
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல்வரின் அறிவுறுத்தலின்பேரில் 64281 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. இதில் ஆக்சிஜன் வசதியுடன் 63664 படுக்கை வசதிகளும், 22820 தனி படுக்கைகளும், 7797 தீவிர சிகிச்சை படுக்கைகளும் என அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளது. மகாராஷ்டிரா, கேரளா போன்று பாதிப்பு அதிகமானால் இன்னும் கூடுதலாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முகக்கவசம் அணிவதை வாழ்க்கையின் ஒரு பாதியாக மாற்றிக் கொண்டால் நல்லது என்றார்.
இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ப.செந்தில்குமார், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை இயக்கனர் தி.சி.செல்வவிநாயகம், மருததுவக் கல்வி இயக்குனர் மரு.இரா.சாந்திமலர், சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.தேரணிராஜன், மருத்துவ பேராசிரியர்கள் மற்றும் செவிலியர்கள் பங்கேற்றனர்.






