மதுரை சித்திரை திருவிழாவில் தங்கக்குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி வைகையாற்றில் அழகர் நேற்று இறங்கினார். மழையிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மதுரை சித்திரை திருவிழா கடந்த 23ம் தேதி மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. மே 2ம் தேதி மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், 3ம் தேதி தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. வைகையாற்றில் அழகர் இறங்கும் பிரசித்தி பெற்ற வைபவம் நேற்று நடந்தது. முன்னதாக அழகர்கோவிலில் இருந்து அழகர், கள்ளழகர் வேடம் பூண்டு கடந்த மே 3ம் தேதி தங்கப்பல்லக்கில் மதுரை புறப்பட்டார். கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல் ஆகிய இடங்களை கடந்து நேற்று முன்தினம் காலை மூன்றுமாவடி வந்தார். அங்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அவரை எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நடந்தது.
தொடர்ந்து புதூர், ரேஸ்கோர்ஸ் காலனி, ரிசர்வ் லைன், தல்லாகுளம் உள்ளிட்ட 456க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அழகர் காட்சி அளித்தார். தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு நேற்று முன்தினம் இரவு வந்தார். நள்ளிரவு 12 மணியளவில் திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அழகருக்கு சூட்டப்பட்டது.
நேற்று அதிகாலை 2.30 மணிக்கு மேல் அழகர், தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலில் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அவருக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. அதிகாலை 3 மணி அளவில் தங்கக்குதிரையில் அமர்ந்தபடி, ஆயிரம் பொன் சப்பரத்தில் வைகை ஆற்றுக்கு அழகர் புறப்பட்டார். அழகர் ஆற்றில் இறங்குவதையொட்டி வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்ததால் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
தல்லாகுளத்தில் இருந்து பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தபடி ஆழ்வார்புரம் பகுதிக்கு அழகர் வந்தார். அதிகாலை 4 மணிக்கு மதுரை தெற்குவாசல் வீரராகவ பெருமாள் வைகை ஆற்றுக்கு வந்து மண்டகப்படியில் இருந்தார். அவர், தங்கக்குதிரையில் வந்த அழகரை வரவேற்று 3 முறை வலம் வந்தார்.






