தஞ்சாவூர்:
தற்கொலை செய்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று வயதான தம்பதியர் தஞ்சாவூர் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனார்.
தஞ்சாவூர் மாவட்டம், கள்ளப்பெரம்பூர், சேத்தி கிராமம், மேலத்தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 61). ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநர். இவரது மனைவி மேரி லலிதா (51). இவர்களுக்கு திருமணமான ஒரு மகன், மகள் உள்ளனர்.
தனது ஒரே மகன், பெற்றோர்களை அடித்துத் துன்புறுத்தி கொடுமைப்படுத்தி, சொத்துக்களை பறிமுதல் செய்வதற்காக வீட்டை விட்டு வெளியேற்றியதால், இவர்கள் 2 பேரும் தற்கொலை செய்து கொள்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனத் தஞ்சாவூர் கோட்டாட்சியர் (பொறுப்பு) பழனிவேலுவிடம் மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில், எனது மகளின் கணவர் உயிரிழந்ததால் குழந்தையுடன் என்னிடம் வசித்து வந்தார். எனது மகனுக்கு திருமணம் முடிந்து சில நாட்களில் அவரது மாமனார் வீட்டோடு சென்று விட்டார். தற்போது கணவர் சந்திரசேகரன் பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் பென்சன் தொகையில் வாழ்க்கையை நடத்தி வருகின்றோம்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் எங்களையும், மகள் மற்றும் குழந்தைகளைத் தகாத வார்த்தைகளால் திட்டி, அடித்து துன்புறுத்தி, கொடுமைப்படுத்தி, வீட்டை விட்டு என் மகன் வெளியேற்றினார். மேலும் எங்களது வீட்டை பூட்டினர். இதனையடுத்து எனது மகள் குழந்தையுடன் உறவினர் வீட்டிற்குச் சென்று விட்டார்.
பின்னர் சில நாட்களுக்குப் பிறகு நாங்கள் மீண்டும் அந்த வீட்டிற்கு சென்ற போது, இதனையறிந்த எனது மகன் மற்றும் மருமகள், சொத்துக்களை எங்களது பெயரில் எழுதிக் கொடுக்கவில்லை என்றால், ஏதாவது செய்து விடுவோம் என்று மிரட்டினார்கள். இதற்குப் பயந்து தற்போது சமயபுரம் மற்றும் மாரியம்மன் கோயில் களில் கடந்த ஒன்றரை மாதங்களை வசித்து வருகின்றோம்.
தற்போது உடல் நிலை மிகவும் மோசமாகி வரும் நிலையில், எங்களது வீடு, ஆவணங்கள், தங்க நகைகள், ரொக்கப்பணத்தையும் மீட்டு, அந்த வீட்டினை மீட்டுத் தரவேண்டும் என முதல்வரின் தனிப்பிரிவு உள்பட அனைத்து அதிகாரிகளுக்கும் புகார் அனுப்பியும் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருந்து வருகின்றனர்.
மேலும், மருமகளின் உறவினர், காவல் துறையில் இருப்பதால், எங்கள் மீது பொய் புகார் தந்து, எனது மகளின் மீது விபச்சார வழக்குப் பதிந்து விடுவதாக மிரட்டுகின்றனர். எனவே, எங்களுக்கு அந்த வீட்டை மீட்டு, என் மகன் எடுத்துச் சென்ற அனைத்து பொருட்களை, அவர்களிடமிருந்து மீட்டுத் தர வேண்டும் அல்லது நாங்கள் தற்கொலை செய்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.