உலக கோப்பை கிரிக்கெட் 2023 தொடருக்கான வெற்றி கோப்பை விண்வெளியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐசிசி ஆடவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடப்பு ஆண்டில் இந்தியாவில் நடைபெறும். அதற்கான கோப்பை அறிமுகம் விண்வெளியில் நடந்துள்ளது. பிரத்யேக பலூன் ஒன்றின் மேல் வைக்கப்பட்ட கோப்பை பூமியில் இருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் அடி உயரத்தில் வளிமண்டலத்தில் விளிம்பில் கோப்பை நிலை நிறுத்தப்பட்டது. இன்று முதல் 18 நாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் கோப்பை வரும் செப்டம்பர் 4ம் தேதி மீண்டும் இந்தியாவுக்கு திருபிவரும்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் பிசிசிஐ செயலாளர் ஜெயிஷா, விளையாட்டு போட்டி ஒன்றின் கோப்பை முதன்முறையாக விண்வெளியில் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். விண்வெளியில் இருந்து நேரடியாக அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் கோப்பை வந்து இறங்கியது. முதல் போட்டியானது அக் 5ம் தேதி தொடங்க உள்ள நிலையில், நவம்பர் 19ம் தேதி போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளில், 8 அணிகள் ஏற்கனவே உறுதியாகிவிட்ட நிலையில், எஞ்சிய 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச்சுற்று போட்டி ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. அதில் பங்கேற்றுள்ள 10 அணிகளில் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே உள்பட 6 நாடுகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறி உள்ளன என்பது குறிப்பிடதக்கது..

இந்த சுற்றின் முடிவில் பைனலுக்கு முன்னேறும் 2 அணிகள் ஐசிசி உலக கோப்பையில் விளையாடும். அந்த 2 அணிகள் எவை என்பது ஜூலை 9ம் தேதிதான் தெரியவரும். இந்த நிலையில் ஐசிசி நிர்வாகிகள் இன்று மும்பையில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அதில் 13வது உலக கோப்பைக்கான போட்டி அட்டவணை முழுமையாக வெளியாகும் என்று தெரிகிறது..






