கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய போது பா.ஜ.க.வுக்கு சற்று சாதகமாக இருந்த நிலை, அடுத்த அரை மணி நேரத்திலேயே முற்றிலுமாக மாறிவிட்டது. தற்போதைய நிலையில், அங்கு காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் நிலையில் இருக்கிறது. பெரும்பான்மைக்கும் சற்று கூடுதலாக தொகுதிகளில் அக்கட்சி முன்னிலை வகிக்கிறது.
நாடு முழுவதும் காங்கிரஸ் முகாமில் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. அதேநேரத்தில், யாரை முதலமைச்சராக்குவது என்ற கேள்வியும் காங்கிரசில் எழுந்துள்ளது. முன்னாள் முதல்வர் சித்தராமையாவா? அல்லது கர்நாடகாவில் பல்வேறு சோதனைகளையும் தாண்டி காங்கிரசை காத்து நின்ற டி.கே.சிவகுமாரா? என்று இப்போதே அக்கட்சியினரிடையே விவாதங்கள் தொடங்கிவிட்டன. கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பான முக்கிய அம்சங்களைப் பார்க்கலாம்.






