நடைபெறவிருக்கும் ஈரோடு இடைத்தேர்தலில் மே பதினேழு இயக்கத்தின் ஆதரவு மற்றும் நிலைப்பாடு குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை ப்ரஸ் க்ளப்பில் நடைபெற்றது. இதில், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர் பிரவீன் குமார், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், பொதுச்செயலாளர் தோழர் ரேடியோ வெங்கடேசன் மற்றும் விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் வேட்பாளர் தோழர் வெண்ணிலா ஆகியோர் பங்கேற்றனர்.இதில் பேசிய தோழர் திருமுருகன் காந்தி, “இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறக்கூடிய சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாகவும், அதேவேளை முக்கிய எதிர்க்கட்சிகள் பங்கேற்காத தேர்தலாகவும் இருக்கிறது. ஆளுங்கட்சி பெரும்பான்மை பலத்துடன் இங்கே களத்தில் இறங்கக்கூடிய சூழலில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் அவர்கள் கொள்கை முரண்பாட்டுடன், ‘பெரியாரா பிரபாகரனா’ என்று தமிழின தலைவர்களை எதிரெதிராக நிறுத்துகின்ற ஒரு மோசமான முயற்சியை முன்னெடுத்திருக்கின்றார்.மக்களினுடைய கோரிக்கைகளைப் பின்னுக்குத் தள்ளி, தமிழினத்திற்காக உழைத்த இரண்டு பெரும் தலைவர்களை எதிரெதிராக நிறுத்துகின்ற முயற்சியை ஏன் சீமான் முன்னெடுக்கிறார் என்கின்ற கேள்வியை நாங்கள் எழுப்ப விரும்புகின்றோம். தந்தை பெரியாரினுடைய காலகட்டம் வேறு, மேதகு பிரபாகரனுடைய காலகட்டம் வேறு. தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உருக்கொள்கிறது. இந்திய நாட்டிற்கு எதிராக விடுதலைப் புலிகளுக்கும் தமிழ்த்தேசியத்திற்கும் நாங்கள் தோள் கொடுக்கிறோம் என்று சொன்னவர்கள் திராவிட இயக்கத் தோழர்கள். அதற்காக சிறைபட்டார்கள், வழக்கும் வாங்கினார்கள். ஆனால் தமிழர்களுக்காக போராடிய இந்த ரெண்டு பேரையும் எதிர் எதிராக நிறுத்துவதன் மூலமாக பாரதிய ஜனதா கட்சி நுழைவதற்கான ஒரு இடத்தை உருவாக்கிக் கொடுக்கிறார் சீமான்.தந்தை பெரியார் குறித்தும் மேதகு பிரபாகரன் குறித்தும் கொச்சையாக பேசும் சீமான் இதுவரை தான் பரப்பும் அவதூறுக்கு எந்த ஆதாரத்தையும் கொடுக்கவில்லை, மன்னிப்பும் கேட்கவில்லை. இப்போது வெளிப்படையாகவே பிரபாகரன் அவர்களுடைய அண்ணன் மகனை காதில் கேட்க முடியாத வார்த்தைகளால் இழிவாகத் திட்டி இருக்கிறார்.மேதகு பிரபாகரன் அவர்கள் தனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் இந்த போராட்டத்தில் களப்பலியாக கொடுத்தவர். அவர் குடும்பத்தினுடைய இரத்த உறவை இவ்வளவு இழிவாக பேசுவதற்கான துணிச்சலை சீமானுக்கு யார் கொடுத்தது? இதற்கு முன்பும் விடுதலைப் புலிகளின் மிக முக்கியமான தளபதியான பொட்டம்மான் குறித்தும் இழிவாகப் பேசினார் சீமான். வெறும் வாய்ச்சவடால் பேசி, விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளை இழிவுபடுத்தும் சீமானை நாங்கள் ஒருபொழுதும் ஏற்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம்.திராவிட இயக்க தலைவர்களை, அதிமுகவினுடைய தலைவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார், இசுலாமியர்கள் என அனைவரையும் இழிவுபடுத்தி பேசும் சீமான், இதுவரை பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களை இவ்வாறு பேசியதில்லை. எனவே இந்தத் தேர்தலிலே சீமானை அம்பலப்படுத்துவது தான் எங்களது நோக்கம்.அதே வேளையில் தமிழ்நாட்டு ரிக்கைகளான ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மின்சாரத்துறை ஊழியர்கள் பணி நிரந்தரம், மாஞ்சோலைத் தொழிலாளர்களுக்கான நிவாரணம், வேங்கைவயலுக்கான தீர்வு என்று திமுகவோடுபோராடிக்கொண்டிருக்கின்றோம்.ஆனால் இந்த கோரிக்கைகள் முன்னுக்கு வரவோ விவாதிக்கப்படாத நிலையில், பெரியாரை பிரபாகரனை இழிவு செய்யக்கூடிய சீமானை கைது செய்யாமல் கைகட்டி பார்க்கக்கூடிய திமுக அரசையும் சேர்த்துதான் நாங்கள் இந்த தேர்தல் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்.ஆகவே இந்த ஈரோடு தேர்தலிலே சுயேச்சையாக களம் இறங்குகின்ற விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியை சேர்ந்த பெண் வேட்பாளர் வெண்ணிலா அவர்களை ஆதரிக்கின்றோம். சாதியை பாதுகாக்கக்கூடிய சட்டப்பிரிவை எரிப்பேன் என்று தந்தை பெரியார் சொன்ன போராட்டத்தில் பங்கெடுத்து சிறை சென்றவருடைய பேத்திதான் வெண்ணிலா அவர்கள்.சீமானுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். நாங்கள் உங்களை நேருக்கு நேராக தேர்தல் களத்தில் எதிர்கொள்ளப் போகிறோம். சீமானை அப்புறப்படுத்துகின்ற வகையிலே மக்களிடத்திலே நாங்கள் பரப்புரை மேற்கொள்வோம். போலி தமிழ் தேசியத்தை அம்பலப்படுத்துவதும் தமிழ்நாட்டினுடைய கோரிக்கைகளை முன்னுக்கு கொண்டு வரக்கூடிய தேர்தல் பரப்புரையாக எங்கள் பரப்புரை அமையும்.சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே உள்ள நிலையில் மக்களின் கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லை என்றால் கடுமையான எதிர்ப்பை 2026 தேர்தலில் எதிர்கொள்வார்கள் என்பதை சொல்லுவதற்காகவும் தமிழ்த்தேசிய அரசியலை அடையாளப்படுத்தும் விதமாகவும் பரப்புரை மேற்கொள்கிறோம். நாளை மறுநாள் எங்கள் பரப்புரையைத் தொடங்குகின்றோம்.” என்று கூறினார் தோழர் திருமுருகன் காந்தி.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்துகடவுளை வாழ்த்துதல் குறள் 4: குறள் விளக்கம்: விருப்பும், வெறுப்பும் இல்லாத






