திருமுல்லைவாயலை சேர்ந்தவர் வளர்மதி. இவர் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து மின்சார ரெயிலில் திருமுல்லைவாயல் நோக்கி பயணம் செய்தார். பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தை சென்றடைந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டது. அப்போது வளர்மதியின் பின்னால் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென அவரது கழுத்தில் கிடந்த 10 பவுன் செயினை பறித்தான். பின்னர் மின்னல் வேகத்தில் ரெயிலில் இருந்த கீழே குதித்து தப்பி ஓடி விட்டான். டிப்-டாப் ஆக காணப்பட்ட அந்த வாலிபர் டி.சர்ட், ஜீன்ஸ் பேண்ட் அணிந்துள்ளார். செயினை பறிகொடுத்த வளர்மதி கூச்சல் போட்டு கொள்ளையனை பிடிக்க முயன்றார். இருந்தாலும் மின்னல் வேகத்தில் கொள்ளையன் தப்பி ஓடி நடைமேடையையொட்டியுள்ள காலி இடம் வழியாக ஓடி ரெயில் நிலையத்தை விட்டு வெளியேறினான். இந்த காட்சிகள் ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள கேமராவில் பதிவாகி உள்ளது. அதை வைத்து கொள்ளையனை தேடி கண்டுபிடிக்கும் பணியில் ரெயில்வே போலீசார் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் பெண் பயணிகள் இடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.







