திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து குறைதீர்க்கும் கூட்டத்திற்கும் லஞ்ச ஓழிப்புத்துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் தவறாமல் கலந்து கொள்வதை உறுதிசெய்ய வேண்டுவது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் தா.கிருஸ்துராஜ் அவர்களிடம் தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மாநில இணை பொது செயலாளர் சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது :- திருப்பூர் மாவட்டத்தில் மக்களின் குறைகளை கேட்க மாவட்ட பகுதிகளில் நடைபெறும் அனைத்து குறைதீர்க்கும் கூட்டத்திற்கும் லஞ்ச ஓழிப்புத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் தவறாமல் கலந்து கொள்ளவதை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து உறுதிசெய்ய வேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மற்றும் பல்வேறு வகையான மாதாந்திர பல குறைதீர்க்கும் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் நேரில் வந்து அவர்களின் குறைகளைக் கோரிக்கை மனுவாகக் கொடுத்து வருகிறார்கள்.
பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது 3 மாத காலத்திற்குள் தீர்வு காண வேண்டும். அப்படி இல்லை என்றால் விதிகளின் படி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதிசெய்ய வேண்டும். மேலும் ஒரு மனு நிராகரிக்கப்பட்டது என்று பதில் கூறினால் அதற்குத் தகுந்த காரணத்தைத் தெரிவிக்க வேண்டும் என்ற விதிகளை பின்பற்றுவதை உறுதிசெய்ய வேண்டும் பொது மக்கள் அளிக்கும் மனுக்களுக்குப் பதில் அளிக்கப்பட்டுள்ளது என்று எண்ணிக்கை அளவில் கூறாமல் உண்மையாகவே அந்த மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்கிற விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அனைத்துத் துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கட்டாயம் பங்கேற்க வேண்டும். கூட்டத்தின் இடையில் அதிகாரிகள் கூட்டத்தை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
இனி வரும் காலங்களில் பொது மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனடி தீர்வு வேண்டும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கும் போது லஞ்ச ஓழிப்புத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் அவசியம் கலந்து கொள்ளவதை உறுதிசெய்து அப்படி கலந்து கொள்ள முடியாதபட்சத்தில் நன்றாக விவரம் தெரிந்த அடுத்த நிலை அலுவலர்களை கலந்து கொள்ள செய்ய வேண்டும் ஏதோ பெயருக்கு வந்தோமா போனமா என்றெல்லாம் இனிமேல் இல்லாமல் மக்களின் மனுக்களின் மீது உடனுக்குடன் உரிய தீர்வுகாண்பதை மாவட்ட நிர்வாகம் உறுதிசெய்ய வேண்டும்.
எனவே மாவட்டத்தில் அனைத்து குறைதீர்க்கும் கூட்டத்திலும் லஞ்ச ஓழிப்புத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டு மக்களின் மனுக்கள் மீது காலதாமின்றி விரைவாக உரிய தீர்வுகாணப்படுவதை உறுதிசெய்ய வேண்டுமென தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச சார்பில் கேட்டுக் கொள்கிறோம் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.






