தாம்பரம்:
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பக்ருதீன் என்பவரின் மகள் பவுசியா (20). இவர், குரோம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர், கேரளாவை சேர்ந்த தாஜுதீன் என்பவரின் மகன் ஆசிக்(20). என்பவருடன் கடந்த 5 ஆண்டுகளாகப் நெருங்கி பழகி வந்துள்ளார். இவர்கள் இருவரும் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில் மாணவி பவுசியா மர்மமான முறையில் விடுதி அறையில் இறந்து கிடப்பதாக குரோம்பேட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார் மாணவியின் உடலை மீட்டனர். பின்னர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
உடன் தங்கியிருந்த ஆசிக் செல்போன் எண்ணை வைத்து அவர் எங்கு உள்ளார் என்பதை கண்டறிந்தனர், பல்லாவரம் ரயில் நிலையத்தில் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விடுதி அறையில் இருவரும் தங்கியிருந்தபோது ஏற்பட்ட வாய் சண்டையால், ஆத்திரமடைந்த ஆசிக் பவுசியாவின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். அதன் பின் அவர் யாருக்கும் தெரியாமல் கேரளா தப்பிச் செல்ல திட்டமிட்டுயிருந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து ஆசிக்கை கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்தனர். இந்த கொலை சம்பவம் குரோம்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






