பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-140க்குட்பட்ட எல்லையம்மன் கோயில் தெருவில் சீர்மிகு நகரத் திட்ட நிதியின் கீழ் ரூ.1.65 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்ட கோதண்டராமர் கோயில் குளத்தை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு.மகேஷ் குமார் அவர்கள்,
சட்டமன்ற உறுப்பினர்கள், திரு. சிவகுமார் (எ) தாயகம் கவி அவர்கள், (திரு.வி.க.நகர்) திரு. அரவிந் ரமேஷ் அவர்கள், (சோழிங்கநல்லூர்) திரு. ஏ.எம்.வி. பிரபாகர ராஜா அவர்கள், முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள், மத்திய வட்டாரம் துணை ஆணையாளர் திரு.எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., அவர்கள், நிலைக்குழுத் தலைவர்கள், திரு. க. தனசேகரன் அவர்கள், (கணக்கு) திரு. பாலவாக்கம் த. விசுவநாதன் அவர்கள், (கல்வி) மண்டலக்குழுத் தலைவர்கள், திரு. எம். கிருஷ்ணமூர்த்தி அவர்கள், (கோடம்பாக்கம்) திரு. நௌம்பூர் வே.ராஜன் அவர்கள், (வளசரவாக்கம்) திரு. ஆர். துரைராஜ் அவர்கள், (அடையார்) மாமன்ற உறுப்பினர் திரு. எம். ஶ்ரீதரன் அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-140, மேற்கு மாம்பலத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயில் வளாகத்திற்கு வெளியே 14.0276 சதுர அடி (31 கிரவுண்ட் 276 சதுரடி) பரப்பளவில் 350 அடி நீளம், 225 அடி அகலம் கொண்ட பெரிய திருக்குளம் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை ஆலய மேம்பாட்டு நிதி மற்றும் ஆணையர் பொதுநல நிதியிலிருந்து ரூ.24,96,064/- செலவில் 29.10.1997ல் மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களால் திருப்பணி துவங்கப்பட்டு 1998 ஆம் ஆண்டு மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களால் முடிக்கப்பட்டது. அதன் பிறகு திருக்குளத்தை கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் பொதுமக்களுடன் இனைந்து தூர் வாரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இக்குளம் சென்னை மாநாகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் இந்து சமய அறநிலையத்துறை நிபந்தனைகளுக்குட்பட்டு புனரமைத்தல் மற்றும் மேம்படுத்திடும் பணிக்கு அனுமதி வழங்கப்பட்டு சென்னை மாநகராட்சி மூலம் 1.65 கோடி மதிப்பீட்டு செலவில் புதுப்பிக்கும் பணி சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்களால் 28.08.2020 அன்று துவக்கவிழா நடைபெற்றது.
இதனை தொடர்ந்து கரைப்பகுதிகள் உடைந்தும், மிகவும் பழுதுபட்டு இருந்த இக்குளத்தினை தற்பொழுது, தூர்வாரி கரைகளை பலப்படுத்துதல், கரையின் சுற்றுப்பகுதியில் கருங்கல் பதித்தல், சுற்றுச்சுவர் உயர்த்தப்பட்டு இரும்பு கம்புவேலி மற்றும் கிரில் அமைத்தல், துருப்பிடிக்காத கைப்பிடிகளுடன் கூடிய நடைபாதை அமைத்தல், நாட்டு மரக்கன்றுகள், ஆயூர்வேத செடிகள் மற்றும் வண்ணப் பூச்செடிகள் நடுதல், சுற்றுச்சுவரில் கண்கவரும் வகையில் வண்ண ஓவியங்கள் வரைதல் மற்றும் வர்ணம் பூசுதல், செடிகளின் தண்ணீர் தேவைக்காக ஆழ்துளைக்கிணறு அமைத்தல், குளத்தைச் சுற்றி பாதசாரிகள் அமரும் இருக்கைகள், மின்கம்பங்கள் அமைத்தல் மற்றும் கேமராக்கள் பொருத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு மாண்புமிகு அமைச்சர் பெருமக்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.






