சென்னை:
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,சென்னை மாநகரை அழகுபடுத்த மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சுற்றுச்சூழலைப் பாதிக்கின்ற தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினைத் தவிர்க்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியால் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரசின் அறிவுறுத்தல்களை மீறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்துபவர்களிடமிருந்து அப்பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கவும், தொடர்ந்து தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களின் தொழில் உரிமத்தை ரத்து செய்யவும், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அதற்கு மேல் நிலையில் உள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 01.02.2023 முதல் 20.02.2023 வரை மாநகராட்சி அலுவலர்களால் தெருவோர வியாபாரிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் 17,884 இடங்களில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 4,972 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் 1,937.9 கிலோ கிராம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.14,16,300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், சாலைகளிலும், நடைபாதைகளிலும் மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களிலும் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருட்களில் காய்கறிகள், பூக்கள், பழங்கள் மற்றும் இதரப் பொருட்களை வைத்து வியாபாரம் செய்பவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், வாகனங்களும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, வணிக நிறுவனங்கள், சிறு அங்காடிகள், தெருவோர வியாபாரிகள் மற்றும் வாகனங்களில் வியாபாரம் செய்வோர், பொதுமக்கள் அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்த்து, பிளாஸ்டிக் மாசில்லா சென்னையை உருவாக்க பொதுமக்கள் அனைவரும் தங்களது முழு ஒத்துழைப்பை அளிக்கவேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.