சென்னை:
திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு, வரும் 17ம் தேதி சேலத்தில் நடக்கிறது. இளைஞரணியின் முதல் மாநாடு 2007ல் நடைபெற்ற நிலையில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு சேலத்தில் திமுக இளைஞரணி மாநில மாநாடு நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. இந்த மாநாட்டில் 5 லட்சம் பேர் வரை பங்கேற்க திமுக இளைஞரணி சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
2024-ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஒரு முன்னோட்டமாக இந்த மாநாடு அமையும் என திமுக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். திமுக இளைஞரணியின் மாநாடு என்பதால் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு மட்டுமே இந்த மாநாட்டில் கலந்துக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிலையில் மாநாட்டில் பங்கேற்க திமுக கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோவை திமுகவின் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர், தனுஷ்குமார் நேரில் சந்தித்து மாநாட்டிற்கு கலந்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கூட்டணி கட்சி தலைவர்களையும் அழைப்பதற்கு திமுக தரப்பில் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு என தகவல் வந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை திமுக கூட்டணி சேலத்தில் தொடங்குமா? என அரசியல் கட்சியினர் மத்தியில் ஏதிர்பார்ப்பு நிலவியுள்ளது.






