திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அமைச்சர் உத்தரவை மீறி சிறப்பு தரிசனத்திற்காக கட்டணம் வசூல் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பவுர்ணமி நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் சிரமமின்றி விரைந்து தரிசனம் மேற்கொள்ளும் வகையில் பவுர்ணமி நாட்களில் சிறப்பு கட்டண தரிசனம் முழுமையாக ரத்து செய்து பொது தரிசனத்தின் மூலமாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தரிசனம் மேற்கொள்ள இந்த மாதம் முதல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்துள்ளார்.
ஆனால் இன்று காலை அருணாசலேஸ்வரர் கோவில் அம்மணி அம்மன் மற்றும் ராஜ கோபுரம் பகுதியில் சிறப்பு கட்டண தரிசனத்திற்கான கட்டணத்தொகையாக ஒருவருக்கு தலா ரூ.50 வசூலிக்கப்பட்டது. இதுகுறித்து பக்தர்கள் கோயில் அலுவலர்களிடம் கேட்டபோது, பவுர்ணமியின் போது தான் சிறப்பு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டது. பவுர்ணமியை தவிர மற்ற நாட்களில் சிறப்பு தரிசன கட்டணம் வசூலிக்கப்படும் என்றனர்.
அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டு ஒரு நாள் ஆன நிலையில் கோவில் அலுவலர்கள் கட்டண தரிசனத்தை ரத்து செய்யாதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் கோயில் ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரத்திலும் வைக்கப்பட்டு இருந்த கட்டண தரிசன வழிக்கான பேனர்கள், வரிசையில் தொங்கவிடப்பட்டு இருந்த பலகையும் அகற்றப்பட்டது.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





