ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 30 மாநிலங்களைச் சேர்ந்த 1,800க்கும் மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் தமிழகத்திலிருந்து 180 க்கும் மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்றனர்.
5 நாட்கள் நடைபெற்ற போட்டியில் ஜூனியர், சப் ஜூனியர், சீனியர் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 17 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டிருந்தனர். இதில் (Kickboxing) உதை குத்துச் சண்டை போட்டியில் தேசிய அளவில் சுதர்சன் என்ற மாணவன் முதல் இடத்தைப் பெற்று தங்க பதக்கத்தை வென்றார்.
மேலும் தேசிய அளவிலான இப்போட்டியில் திருப்பூரில் இருந்து கலந்து கொண்ட வீரர்கள் 3 பேர் தங்கப் பதக்கமும், ஒரு வெள்ளி பதக்கமும் 9 பேர் வெண்கல பதக்கமும் வென்றனர். இந்நிலையில் இப்போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று திரும்பிய திருப்பூருக்கு மாவட்டத்தை சேர்ந்த வீரர் வீராங்கனைகளை அவர்களின் பெற்றோர்கள் மாலைகளை அணிவித்து, வாழ்த்து தெரிவித்து உற்சாகத்துடன் வரவேற்றனர்.






