பாஜகவை மீண்டும் ஆட்சியில் மக்கள் அனுமதித்தால் தமிழ், தமிழ்நாடு, தமிழ் இனத்துக்கும் மட்டுமல்லாது இந்திய திரு நாட்டிற்கே பெரும் கேடாக அமையும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காட்டூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதேபோல் கலைஞர் கோட்டத்தில் உள்ள முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்தார். பின்னர் விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பாரதிய ஜனதா ஆட்சிக்கு வருவதை தடுக்காவிட்டால் தமிழ்நாடு என்ற மாநிலமே இல்லாமல் போய்விடும் என்று தெரிவித்தார்.
பாரதிய ஜனதாவை மீண்டும் மக்கள் ஆள அனுமதித்தால் தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும், தமிழ் இனத்திற்கும், இந்திய திரு நாட்டிற்கும் பெரும் கேடாக முடியும். நாம் நெருக்கடியான காலக்கட்டத்தில் இருக்கிறோம்; சரியான முடிவு எடுக்காவிட்டால் 4,000 ஆண்டுகள் பழமையான தமிழ்நாடு இல்லாமல் போகும். தமிழ்நாட்டை போல இந்தியா முழுவதும் மதச்சார்பற்ற கூட்டணி ஒற்றுமையாக செயல்படுவது அவசியம் என்று கூறினார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியா முழுமைக்கும் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவோம். வரும் 24ம் தேதி பாட்னாவில் ஜனநாயக விளக்கு ஏற்றப்பட உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பாஜக பரப்பி வரும் சர்வாதிகார காட்டுத் தீயை ஜனநாயக விளக்கின் மூலம் அணைக்க வேண்டும். இதன் முதல்கட்டமாக முதல் ஜனநாயக விளக்கை பாட்னாவில் ஏற்ற நிதிஷ்குமார் தயாராகிக் கொண்டிருக்கிறார். வெற்றி வேண்டும்; வெற்றிக்கு முன்னால் ஒற்றுமை வேண்டும் அதன் முன்னோட்டமாகவே பாட்னாவில் ஜனநாயக மாநாடு நடக்கவுள்ளது. ஜனநாயக போர்களத்தில் கலைஞரின் போர் தளபதியாக பாட்னாவில் நடக்கும் ஜனநாயக மாநாட்டில் பங்கேற்பேன் என்று கூறினார்.






