சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரத்தின்படி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், எண்ணெய் நிறுவனங்கள் மாதத்திற்கு இரண்டு முறை சமையல் சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி, கடைசியாக கடந்த ஜூலை மாதம் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.50 உயர்த்தின. முன்னதாக, கடந்த மே மாதத்தில் இரண்டு முறை வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. ஆனால், கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. இருப்பினும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், அனைத்து நுகர்வோருக்கும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையை மத்திய அரசு ரூ.200 குறைத்துள்ளது.
மத்திய அமைச்சரவை முடிவுகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், அனைத்து நுகர்வோருக்கும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களின் விலை ரூ.200 குறைக்கப்பட்டுள்ளது. ரக்ஷாபந்தன், ஓணம் பண்டிகைகயை முன்னிட்டு இது நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் பரிசு என்றார். ரக்ஷாபந்தன், ஓணம் பண்டிகையையொட்டி, பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கூடுதலாக, 75 லட்சம் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
வீட்டு உபயோக சிலிண்டருக்கு குறைக்கப்பட்டுள்ள ரூ.200 ரூபாயை மானியத் தொகையாக எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கவுள்ளது. இதனால் தற்போது ரூ.1118க்கு விற்கப்படும் சிலிண்டர் விலை ரூ.900 வரை குறையும் என தெரிகிறது. ஏற்கனவே உஜ்வாலா சிலிண்டர் பயனர்களுக்கு ரூ.200 மானியம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, பொது அறிவிப்போடு சேர்த்து அவர்களுக்கு மொத்தம் ரூ.400 குறைக்கப்படும்.






