
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்ட நிதியின் கீழ் ரூ.112.23 கோடி மதிப்பீட்டில் புதிதாக மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., அவர்கள் இன்று (19.03.2023) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெள்ளத்தடுப்பு நிவாரண நிதியின் கீழ், அடையாறு மண்டலத்திற்குட்பட்ட இந்திரா நகர், முதல் அவென்யூவில் ரூ.29.16 இலட்சம் மதிப்பீட்டிலும், ஜெர்மன் வங்கி நிதியுதவியுடன் கோவளம் வடிநிலப்பகுதியில் பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட கங்கை தெரு, ராம் நகர் (வடக்கு) மற்றும் ராம் நகர் வடக்கு 4வது தெருவில் ரூ.31.58 கோடி மதிப்பீட்டிலும், ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட நங்கநல்லூர், 48வது தெருவில் ரூ.7.87 கோடி மதிப்பீட்டிலும் புதிய மழைநீர் வடிகால் நடைபெற்று வருகிறது.
மேலும், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட அண்ணா பிரதான சாலையில் ரூ.24.7 கோடி மதிப்பீட்டிலும், ஆர்யகவுடா சாலையில் ரூ.3.52 கோடி மதிப்பீட்டிலும் புதிய மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதியில் திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட பல்லவன் சாலையில் ரூ.15.4 கோடி மதிப்பீட்டில், புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்ட நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் மேற்குறிப்பிட்ட பணிகளை அரசின் தலைமைச் செயலாளர் அவர்கள் இன்று (19.03.2023) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, அரசின் தலைமைச் செயலாளர் அவர்கள் மேற்குறிப்பிட்ட பணிகள் அனைத்தையும் காலதாமதமின்றி மேற்கொண்டு பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வரவும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்றி பணிகளை மேற்கொள்ளவும் அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள், முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள், இணை ஆணையாளர் (பணிகள்) டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள், வட்டார துணை ஆணையாளர்கள் திரு.எம்.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., (வடக்கு) அவர்கள், திரு.எஸ். ஷேக் அப்துல் ரகுமான், இ.ஆ.ப., (மத்தியம்), திரு.எம்.பி.அமித், இ.ஆ.ப., (தெற்கு) அவர்கள், அடையாறு மண்டலக்குழுத் தலைவர் திரு.ஆர்.துரைராஜ் அவர்கள், தலைமைப் பொறியாளர் (பொது) திரு.எஸ்.ராஜேந்திரன், மண்டல அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.