டெல்லி ஐஐடி விடுதியில் தங்கியிருந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். டெல்லி ஐஐடி-யில் பி.டெக் கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் படிப்பை மாணவர் அனில் குமார் (21) என்பவர் படித்து வந்தார். இவர் டெல்லி ஐஐடி-யின் விந்தியாச்சல் விடுதியில் தங்கியிருந்தார். விடுதியின் விதிமுறைகளின்படி, அவர் கடந்த ஜூன் மாதம் விடுதி அறையை காலி செய்ய வேண்டும். சில பாடங்களில் தேர்ச்சி பெற முடியாததால், மேலும் ஆறு மாதங்கள் விடுதியில் தங்கி தேர்ச்சி பெற விரும்புவதாக விடுதி அதிகாரிகளிடம் கூறினார். அவரது கோரிக்கையை ஏற்று மேலும் ஆறு மாதங்கள் விடுதியில் தங்க விடுதி நிர்வாகம் அனுமதி அளித்தது.
இந்நிலையில் விடுதியில் தங்கியிருந்த மாணவர் அனில் குமார், கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனை தொடர்ந்து அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார், அனில் குமாரின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், ‘மாணவர் தங்கியிருந்த அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால், தீயணைப்புத் துறையினர் வந்து பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். அதன்பின் மாணவரின் சடலத்தை கைப்பற்றினோம். ஏதேனும் தற்கொலை குறிப்பு கடிதம் உள்ளதா? என்பதை தேடி வருகிறோம். ஐஐடி-யின் முதலவர், தலைமை பாதுகாப்பு அதிகாரி, விடுதி அதிகாரி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தற்கொலை என்பது உறுதியாகியுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்’ என தெரிவித்தனர்.






