மாமல்லபுரம்:
மாமல்லபுரம் கடற்கரையில் இன்று கடல் அலையின் சீற்றம் 10 அடி உயரத்துக்கு அதிகரித்தது. இதனால் மீனவப் பகுதிகளில் கடல் முன்னோக்கி வந்ததால் அப்பகுதி மீனவர்கள் அச்சமடைந்தனர்.
மாமல்லபுரம் கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள மீனவ குப்பங்களில் 500க்கும் மேற்பட்ட மீனவர்களின் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தினமும் கடலில் குறிப்பிட்ட தூரத்துக்கு சிறிய படகுகளில் சென்று மீன்பிடித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மாமல்லபுரம் கடற்கரை பகுதிகளில் கடல் அலைகள் சுமார் 10 அடி உயரத்துக்கு எழும்பி, கரையை வேகமாக வந்தன.
இதனால் கரை பகுதியை தாண்டி பல மீட்டர் தூரத்துக்கு கடல் முன்னோக்கி வந்து, அங்குள்ள கடற்கரை உணவகங்களை அலைகள் வேகமாக தாக்கியது. மேலும், அங்கு 6 அடி உயரத்துக்கு கடல் அலைகளின் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால், வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசி வருகிறது. கொக்கிலமேடு மீனவர் பகுதியில் இருந்து கோவளம் கடற்கரை வரை கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.






