சென்னை:
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் ரூ.2.49 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள திராவிடப் பேரொளி அயோத்திதாச பண்டிதரின் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை திறந்து வைத்தார். இது தொடர்பாக, காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “தமிழ்நாட்டினுடைய அறிவியக்கத்தின் மாபெரும் பேரொளியாக திகழ்ந்த அயோத்திதாசப் பண்டிதருக்கு நம்முடைய அரசு மணிமண்டபம் அமைத்துச் சிறப்புச் செய்கிறது. இது நமது அரசுக்குக் கிடைத்த மிகப் பெரிய பெருமையாகும்.
சென்னை கிண்டி காந்தி மண்படம் வளாகத்தில் அயோத்திதாசப் பண்டிதருடைய திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் எழில்மிகு தோற்றத்தோடு ‘அறிவொளி இல்லமாக’ அமைக்கப்பட்டிருக்கிறது.அறிவுலகப் பேரொளியான அவருடைய மணிமண்டபத்தை திறந்து வைக்கின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை நினைத்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
எழுத்தாளர், ஆய்வாளர், வரலாற்று ஆசிரியர், மானுடவியல் சிந்தனையாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர், மருத்துவர்,பேச்சாளர், மொழியியல் வல்லுநர், பன்மொழிப் புலவர்,புதிய கோட்பாட்டாளர், சிறந்த செயல்பாட்டாளர், சளைக்காத போராளி என பன்முக ஆற்றல் படைத்தவர் அயோத்திதாசர், தான் வாழ்ந்த காலம் முழுவதும் அறிவொளி பரப்பியவர். இவர் அமைத்துக் கொடுத்த அறிவுத் தளத்தில்தான் 150 ஆண்டுகால தமிழர் அறிவியக்கம் செயல்பட்டு வருகிறது.
“என் பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்கும், சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடி அயோத்திதாசப் பண்டிதர்தான்” என்று ‘பகுத்தறிவுப் பகவலன்’ தந்தை பெரியார் சொன்னார். இவருடைய பத்திரிகைகளுக்கும், புத்தகங்களுக்கும் உலக அளவில் வாசகர்கள் உருவானார்கள். “இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு சாதியும் மதமும் தான் தடை” என்று சொன்ன அயோத்திதாசர், “மனிதர்களை, மனிதர்களாக பார்ப்பவர் தான் மனிதன்” என்று முழங்கினார். அவருடைய நூல்கள் இன்றைக்கும் அறிவொளி ஊட்டுவதாக இருக்கிறது.1845 முதல் 1914 வரை வாழ்ந்த அயோத்திதாசருடைய 175-வது ஆண்டு விழாவின் நினைவாகவும் இந்த மணிமண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.







