ஆந்திர மாநிலம், சித்தூரை சேர்ந்தவர் சரவணன் 51. குடும்பத்தினர் ஆதரவின்றி தனியாக வசித்து வந்த அவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
சொந்த ஊரில் சிகிச்சை பெற்று வந்த அவர், உயர் சிகிச்சைக்காக சில மாதங்களுக்கு முன்பு ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். நரம்பியல் துறையின் கீழ் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உதவிக்கு யாரும் இல்லாததால், அவர் தனியாக சிகிச்சையில் இருந்தார்.
கடந்த 19-ம்தேதி உதவிக்கு யாரும் இல்லாததால், அவர் மருத்துவ மனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். மருத்துவமனையில் பணிபுரியும் தனியார் நிறுவன ஊழியர்கள், நடக்கமுடியாத நிலையில் இருந்த சரவணனை ராயபுரம் அண்ணா பூங்கா மேம்பாலம் கீழே படுக்க வைத்து விட்டு சென்றனர். இதனை பார்த்தவர்கள் அவரை மீட்டு மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இதையடுத்து, அவர் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் மீது துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக மருத்துவமனை டீன் பாலாஜி கூறும்போது, “வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட அந்த நோயாளி மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. அந்த நோயாளிக்கு மருத்துவக் சிகிச்சை நல்ல முறையில் தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.







