இந்தியாவில் நிலையான வளர்ச்சியை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மகாரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமும், மின்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள முன்னணி வங்கிசாரா நிதி நிறுவனமுமான ஆர்இசி லிமிடெட், இந்தியாவில் தகுதியான பசுமை திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக ஜப்பானிய யென் தொகையான 60.536 பில்லியனை பசுமைக் கடனாகப் பெறுகிறது. இத்தாலிய ஏற்றுமதி கடன் நிறுவனம், எஸ்ஏசிஇ-யிடமிருந்து இந்தக் கடன் பெறப்படுகிறது.
இந்திய அரசின் ஒரு நிறுவனத்திற்கும் எஸ்ஏசிஇ நிறுவனத்திற்கும் இடையே ஏற்படும் முதல் கடன் ஒத்துழைப்பு இதுவாகும். இந்த கடன் வசதி ஆர்இசி நிறுவனத்திற்கான உத்திசார் முதலீடாக அமையும். இது இந்த நிறுவனத்தின் பசுமை நிதி கட்டமைப்புடன் இணைந்து, நிலையான வளர்ச்சியை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒத்துழைப்பு குறித்து ஊரக மின்மயமாக்கல் கழகமான ஆர்.இ.சி.யின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு விவேக் குமார் தேவாங்கன் கூறுகையில், “இந்த வெற்றிகரமான பரிவர்த்தனை இதுபோன்ற மேலும் ஒத்துழைப்புகளுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.
பசுமை எரிசக்திக்கான கடன் மற்றும் நிலையான வளர்ச்சித் திட்டங்களில் இந்திய – இத்தாலிய வணிக உறவுகளை இது மேலும் மேம்படுத்தும் என்றும் அவர் கூறினார். ஆர்இசி லிமிடெட்: ஊரக மின்மயமாக்கல் கழகமான ஆர்இசி என்பது மின்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு ‘மகாரத்னா’ மத்திய பொதுத்துறை நிறுவனமாகும், இது ரிசர்வ் வங்கியில் வங்கி சாரா நிதி நிறுவனம் (NBFC) மற்றும் உள்கட்டமைப்பு நிதி நிறுவனம் (IFC) என பதிவு செய்யப்பட்டுள்ளது. மின் உற்பத்தி, மின் பகிர்மானம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சார வாகனங்கள், மின்கல சேமிப்பு, பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அமோனியா திட்டங்கள் போன்ற புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ஒட்டுமொத்த மின்சார உள்கட்டமைப்புத் துறைக்கும் ஆர்இசி நிதியுதவி அளிக்கிறது.