புதுடெல்லி:
காவிரி நதிநீதி பங்கீடு தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வர இருந்த நிலையில் வருகிற 21ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசுக்கும் கர்நாடகாவுக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்தநிலையில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஆகஸ்ட் மாதம் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்க கர்நாடக அரசு மறுப்பதாக உச்சநீதிமன்றத்தில் கடந்த 14ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவில், தமிழகத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி நீர் திறந்துவிட காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட நிலையில், 24,000 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைத்தது.
அந்த வழக்கை கடந்த 25ம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், காவிரி ஆணையம் உத்தரவிட்ட அளவின்படி நீர் திறந்துவிடப்பட்டதா? என்பது குறித்து ஆணையம் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு வழக்கை கடந்த செப்டம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தது. ஆனால் வழக்கை 11ம் தேதி விசாரிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விரைந்து செப்டம்பர் 4ம் தேதி விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில், 6ம் தேதி (இன்று) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
ஆனால் இன்று காவிரி வழக்கு விசாரணை பட்டியலில் இடம்பெறாததால் இதன் விசாரணையை 21ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.






