தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தலைவர் அ.முத்துக்குமார், தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.அருண்குமார் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின் கட்டண உயர்வை அறிவித்து உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அந்த மின் கட்டண உயர்வினால் வணிகர்கள் இருமடங்கு மின்சார கட்டணம் செலுத்தும் நிலைக்கு ஆளானார்கள். நாங்கள் அந்த கட்டண உயர்வையே ரத்து செய்ய தமிழக அரசியிடம் கோரிக்கை விடுத்தோம். அதற்கு முன்பாகவே மீண்டும் இந்த மின் கட்டண உயர்வு வணிகர்களை ஒரு அதிர்ச்சிக்கு ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கார்ப்ரேட் கடைகள் மற்றும் ஆன்லைன் வணிக நிறுவனங்களால் பெருமளவு பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்துள்ள நிலையில் வணிகர்களை காக்க வேண்டிய அரசே அவர்களை தொடர் மின் கட்டண உயர்வினால் அழிக்க நினைப்பது எந்த வகையில் நியாயம். இந்த மின் கட்டண உயர்வினை திரும்ப பெற கோரியும் ஏற்கனவே அமல்படுத்தப் பட்ட கட்டண உயர்வை ரத்து செய்ய கோரியும் வருகிற 21-ந்தேதி (புதன் கிழமை) சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் மாநில தலைவர் அ.முத்துக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். எனவே வணிகர்கள் அனைவரும் ஓர் அணியாக திரளாக கலந்து கொண்டு நம்முடைய எதிர்ப்பினை அரசுக்கு தெரிவித்து மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார்.







