அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்திருக்கிறது, அதில் எந்த தவறில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுடன் பூத்கமிட்டி ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:-
அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்ச புகாரில் சிக்கியுள்ளார். எங்கு தவறு நடந்தாலும், யார் குற்றம் புரிந்தாலும், சட்டம் தன் கடமையை செய்யும். சட்டப்பேரவை மசோதாக்களை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பியது குறித்து உச்ச நீதிமன்றமே இறுதி தீர்ப்பு கொடுத்துவிட்டது. உச்சநீதிமன்றத்தின் ஆலோசனைகள், முடிவுகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
2024 நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை 95 சதவீத பணிகள் தற்போது முடிந்துள்ளது. தேர்தல் தேதி அறிவித்த பின்பு கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.







