சென்னை: நாடாளுமன்ற தேர்தல் உள்பட பல்வேறு விஷயங்களை விவாதிப்பது தொடர்பாக, பாஜ நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்கிறார். நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், பிரதான கட்சிகள் அனைத்தும் தங்களை தயார்படுத்தி வருகின்றன. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தற்போது ஆட்சியில் இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்த காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு வருகின்றன. எதிர்க்கட்சிகளின் 2வது ஆலோசனை கூட்டம் நேற்று (திங்கள்) பெங்களூருவில் நடைபெற்றது. இன்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டம் பெங்களூருவில் நடைபெறுகிறது.
இந்நிலையில், 3வது முறையாக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் பாஜவும் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. இதைத்தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பாஜ ஈடுபட்டுள்ளது. இதற்காக டெல்லியில் இன்று (செவ்வாய்) கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை பாஜ நடத்துகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பாஜ சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியான அதிமுவுக்கு இந்த கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், அக்கட்சியும் பங்கேற்கிறது. அதிமுக சார்பில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார்.
இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். பின்னர் மாலையில் நடைபெற உள்ள கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். அப்போது, வருகிற 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பாக கருத்து பரிமாற்றம் நடைபெற உள்ளது. மாநிலங்களில் வலுவாக உள்ள கூட்டணி கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைப்பது பற்றியும், பாஜக வலுவாக உள்ள மாநிலங்களில் கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட உள்ளது. டெல்லியில் பாஜ உடனான கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தை முடித்துக் கொண்டு நாளை (புதன்) எடப்பாடி பழனிசாமி தமிழகம் திரும்புவார்.







