நீலகிரி மாவட்டம் ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு பழங்குடியின சிறுவர்களான இருவர் காணாமல் போனதை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சிறார்களை தேடிய போலீசார் வனப்பகுதிக்குள் சிறுவர்கள் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், டிரோன் மூலம் முதுமலை வனப்பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வனத்துறையினர் மற்றும் காவல் நக்சல் தடுப்பு பிரிவினர் குழுக்களாக பிரிந்து தேடும் பணியில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டம் ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட ஓடக்கொல்லி பகுதியை சேர்ந்த பழங்குடியின தம்பதி கடந்த மாதம் 29-ம் தேதி தேன் எடுப்பதற்காக முதுமலை வனப்பகுதிக்குச் சென்றனர். அப்போது தங்களின் 5 வயது மகன், 10 வயது மகள் ஆகியோரை உறவினர்களிடம் விட்டுச்சென்றனர். இதையடுத்து 30ம் தேதி முதல் தம்பதியின் பிள்ளைகளான 2 சிறுவர்களையும் காணவில்லை. இதனால் 2 சிறுவர்களையும், குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி பழங்குடியின மக்கள் பல இடங்களுக்கு சென்று தேடியும் காணவில்லை. ஆனால் 2 நாட்களாகியும் சிறுவர்களை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து கூடலூர் காவல்துறை மற்றும் முதுமலை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இது தொடர்பாக கூடலூர் காவல்துறையினர் பல கோணங்களில் விசாரணை நடத்தினர்.
மேலும் பெற்றோர் தேன் எடுக்க முதுமலை வனப்பகுதிக்குள் சென்றதால் அவர்களை தேடி 2 சிறுவர்களும் வனப்பகுதிக்குள் சென்றிருக்கலாம் என காவல்த்துறையினர் மற்றும் வனத்துறையினர் சந்தேகித்து சிறுவர்களை வனப்பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று கூடலூர் காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ், ஆய்வாளர் சாகுல் ஹமீது, நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் வனத்துறையினர்
55 பேர் 6 பிரிவுகளாக பிரிந்து முதுமலை வனப்பகுதிக்குள் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து இன்று .டிரோன் மூலம் ஓடக்கொல்லி மற்றும் முதுமலை வனப்பகுதியில் சுமார் 8 கி.மீ தூரம் வானில் பறக்கவிட்டு தேடும் பணி நடைபெற்றது. அதேப்போல் வனத்துறையினர், காவல் நக்சல் தடுப்பு பிரிவினர் குழுக்களாக பிரிந்து தேடும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.






