சென்னை:
அரசின் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் பெண்களிடம் சாதி, வயது, செல்போன் எண் உள்ளிட்ட தகவல் பெறுவதை உடனடியாக தமிழக அரசு கைவிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
கடந்த சில நாட்களாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கட்டணமில்லா பேருந்து பயணம் மேற்கொள்ளும் பெண்களிடம், அவர்களது பெயர், வயது, கைபேசி எண், சாதி போன்ற 15 தகவல்களை நடத்துநர்கள் கேட்டு, போக்குவரத்துத் துறை வழங்கியுள்ள படிவங்களில் அந்த தகவல்களை இடம்பெற செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பொதுவாக, பெண்களிடம் பெயர், வயது மற்றும் கைபேசிஎண்ணை கேட்பது, அவர்களின் தனிப்பட்ட உரிமையில் தலையிடுவது போலாகும். அதுவும், கைபேசி எண்ணை நடத்துநர்கள் வாங்கும்போது, அப்பெண்களுக்கு அருகில் உள்ளவர்களும் அந்த கைபேசி எண்ணை குறிப்பெடுக்க வழிவகை செய்யும். இதன்மூலம் ஒருசில நடத்துநர்களோ அல்லது கைபேசி எண்ணை குறிப்பெடுத்த அருகில் உள்ளவர்களோ அப்பெண்களிடம் பேச முயற்சி செய்யக்கூடும். மேலும், பெண்களின் கைபேசிக்கு வேண்டாத புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்புவதற்கும் வாய்ப்புள்ளது.
இவை அனைத்தையும்விட, பயணம் செய்யும் பெண்களிடம் நீங்கள் என்ன சாதி என்று கேட்பது மிகுந்த கண்டனத்துக்குரியது.
ஏற்கெனவே, சில மாவட்டங்களில் சாதிய ரீதியாக வேண்டாத பல நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இந்நிகழ்வுகளை திமுக அரசால் இதுவரை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில், பெண்களிடம் இதுபோன்ற விவர சேகரிப்பு தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டால் ஏற்படும் பின்விளைவுகளை இந்தஅரசு சிந்தித்ததா என்று தெரியவில்லை.
போக்குவரத்துத் துறையின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு, அதிமுக சார்பில் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். உடனடியாக இதுபோன்ற புள்ளிவிபரங்களை சேகரிக்கும் பணிக்கு அரசு கைவிட வேண்டும் என்றார்.






