கோவை மாநகராட்சியின் இளம் பெண் கவுன்சிலர் நிவேதா கவுன்சிலர் பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்யப்பட்டுள்ளார்.
மேயர் பதவிக்கான ரேஸில் இருந்த நிவேதா கவுன்சிலர் பதவியை இழப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆளுங்கட்சியின் மாநகராட்சி கவுன்சிலர் ஒருவர், பதவி இழப்பு செய்யப்படும் விஷயம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகராட்சி 97வது வார்டு மாமன்ற உறுப்பினராக இருப்பவர் நிவேதா. கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களிலேயே இளம் பெண் கவுன்சிலர் நிவேதா ஆவார். 22 வயது கல்லூரி மாணவியாக தேர்தல் களத்தைச் சந்தித்து வென்றார் நிவேதா. நிவேதா திமுக கோவை கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் மருதமலை சேனாதிபதியின் மகள் ஆவார். நிவேதா தேர்தலில் களமிறங்கும்போதே மேயர் பதவிக்கு வருவார் என்ற பேச்சுகள் எழுந்தன.
கோவை மாநகராட்சி தேர்தலில் திமுக 100க்கு 96 இடங்களில் வென்ற நிலையில், திமுக சார்பில் கல்பனா கோவை மாநகராட்சி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், இளம் கவுன்சிலரான நிவேதா சேனாதிபதி, கடந்த 3 மாநகராட்சி கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்காததால் கவுன்சிலர் தகுதியை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சி மாமன்ற கூட்டங்கள், மாநகராட்சி நிர்வாக அறிவிப்பின்படி நடத்தப்படும். இதில் தொடர்ந்து மூன்று மாமன்ற கூட்டங்களில் பங்கேற்கவில்லை எனில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 பிரிவு 32(1)இன் படி உள்ளாட்சி பதவி பறிபோகும். கவுன்சிலர்கள் தகுதி இழப்பு செய்யப்படுவார்கள்.
தகுதி இழப்பு : பிறகு அடுத்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 பிரிவு 32(4) இன் படி சம்பந்தப்பட்ட நபர் கூட்டங்களில் பங்கேற்காதது குறித்து விளக்கம் ஏதாவது தெரிவித்து இருந்தால் மாநகராட்சி ஆணையாளர் அதனை வெளியிடுவார். அக்காரணத்தை தொடர்ந்து தகுதி இழந்தவர்கள் மீண்டும் தொடர்வது குறித்து மாமன்ற கூட்டம் முடிவு செய்யும்.
இந்நிலையில், கோவை மாநகராட்சியில் 97வது வார்டு திமுக பெண் கவுன்சிலரான நிவேதா சேனாதிபதி கடந்த ஜனவரி, மார்ச், மே ஆகிய மூன்று மாதங்களில் நடைபெற்ற மாமன்றக் கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்காததை தொடர்ந்து இன்று முதல் தகுதி இழக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டு, கவுன்சிலர் நிவேதா காரணம் ஏதாவது தெரிவித்தால் அதனை மாநகராட்சி ஆணையாளர் அடுத்த கூட்டத்தில் வெளியிடுவார். அதனையடுத்து அவர் மீண்டும் பதவியில் தொடர்வது குறித்து மாமன்ற கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
திமுகவின் இளம் கவுன்சிலர் : நிவேதா கோவை மாநகராட்சி மன்ற உறுப்பினர்களிலேயே இளம் பெண் மாமன்ற உறுப்பினர் என்பதும் முன்னாள் திமுக கோவை கிழக்கு மாவட்ட செயலாளர் மருதமலை சேனாதிபதியின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. உள்ளாட்சி தேர்தலின்போது மேயர் ரேஸில் இருந்த நிவேதாவுக்கு மாநகராட்சியில் எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை.
எதிர்பார்த்தபடி மேயர் பதவி கிடைக்காத நிலையில் மாமன்ற கூட்டங்களில் முறையாக பங்கேற்பதை அவர் தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், நிவேதா கவுன்சிலர் பதவி தகுதி இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அதேசமயம், நிவேதா வெளிநாட்டுக்கு படிக்கச் சென்றுள்ளதால் தான் மாமன்ற கூட்டங்களில் பங்கேற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.







