மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினர் இடையிலான மோதல் வன்முறையாக வெடித்து இன்னும் ஓயாமல் நீடிக்கிறது. கடந்த மாதம் 3-ந்தேதி நடைபெற்ற பேரணியில் வன்முறை ஏற்பட்டது. அதில் இருந்து தற்போது வன்முறை ஓயவில்லை.
ஆயுதமேந்திய குழுக்கள் மீது கடும் நடவடிக்கை, 144 தடை உத்தரவு பிறப்பித்தும் அவ்வப்போது வன்முறை நடைபெறுகிறது. இம்பாலில் தடை உத்தரவு அமலில் இருந்து வரும் நேரத்திலும், நேற்று பெண் மந்திரி வீட்டுக்கு ஒரு கும்பல் தீவைத்தது. இந்த நிலையில் நேற்றிரவு மத்திய மந்திரி ஆர்.கே. ரஞ்சன் சிங் வீட்டை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு தீவைத்து கொளுத்தினர். சம்பவம் நடைபெற்றபோது மத்திய மந்திரி ரஞ்சன் அங்கு இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மந்திய மந்திரி ரஞ்சன் கூறுகையில் ”நேற்று இரவு நடைபெற்ற சம்பவங்களை பார்க்கும்போது மிகவும் கவலையாக இருக்கிறது. 50-க்கும் மேற்பட்ட வன்முறையாளர்கள் எனது வீட்டை எரித்துள்ளனர். தரைத்தளம் மற்றும் முதல் தளம் பாதிக்கப்பட்டுள்ளது. நான் எனது குடும்பத்தை சேர்ந்த எவரும் அந்த நேரத்தில் அங்கு இல்லை. வன்முறை எதற்கும் தீர்வாகாது. இந்தச் செயலில் ஈடுபடுட்டவர்கள் மனிதகுலத்திற்கு எதிரிகள்” என்றார். கடந்த மே மாதம் இதுபோன்று அவரது வீட்டை தாக்க கும்பல் முயன்றது. அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தை கலைத்தனர். மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனர். இதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுவே இரு சமூகத்தினரின் மோதலுக்கு பிரதான காரணமாகும்.







