சென்னை:
மஹுவா மொய்த்ராவின் பதவி நீக்கம் என்பது இந்திய அரசியலமைப்பை கேலி கூத்தாக்கியுள்ளது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
“திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மஹுவா மொய்த்ராவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து பாஜக அரசு பதவி நீக்கம் செய்திருப்பது ஜனநாயக படுகொலையாகும்.
நாடாளுமன்றத்தில் சகோதரி மஹுவா மொய்த்ரா எழுப்புகின்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் அளிக்க இயலாத மோடி அரசு, அவரை பழிவாங்கும் வகையில் பதவி நீக்கம் செய்து இந்திய அரசியலமைப்பை கேலி கூத்தாக்கியுள்ளது. தங்களது ஆட்சி அதிகாரத்திற்கு எதிராக யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்ற பாஜகவின் மனப்பான்மை வன்மையாக கண்டிக்கதக்கது.
மஹுவா மொய்த்ரா எழுப்பிய ஏதாவது ஒரு கேள்விக்கு பிரதமர் மோடியிடமோ அல்லது அமித்ஷா உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்களிடமோ, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களிடமோ பதில் இருந்துள்ளதா? நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக தொடர்ந்து கேள்வி எழுப்பினார் என்ற காரணத்திற்காகவே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கௌரி லங்கேஷ், கல்புர்கி என்று தங்களது அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பியவர்களின் குரல்களை எல்லாம் நிரந்தரமாக நிறுத்தியவர்கள் தற்போது நாடாளுமன்றத்தின் குரல்வளையையும் நெரிக்க தொடங்கிவிட்டனர் இது மிகவும் வெட்கக்கேடானது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்ப்பது, உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது, அடிபணியாத எதிர்க்கட்சி உறுப்பினர்களை வரிமானவரித் துறை, அமலாக்கத் துறையினரை ஏவி அடிபணியச்செய்வது என்ற பாஜகவின் அதிகார மமதையின் போக்கு தற்போது மஹுவா மொய்த்ராவின் பதவி நீக்கமாகும்.
அதிகார மமதையுடன் பத்தாண்டு காலமாக பாஜக அரசு மேற்கொண்டு வரும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என சீமான் தெரிவித்தார்.







